Skip to main content

காங். MP, MLAக்களுடன் ஆலோசனை செய்கிறார் தினேஷ் குண்டு ராவ்!

Published on 23/09/2020 | Edited on 23/09/2020

 

K. S. Alagiri  - Dinesh Gundu Rao

 

நாளை (24.09.2020) சென்னை சத்தியமூர்த்தி பவனில், காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் ஆலோசனை நடத்த இருக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்திக்கவும் உள்ளார்.

 

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பா.ஜ.க அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் நாடு தழுவிய தொடர் போராட்டங்களை பல கட்டங்களாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவித்திருக்கிறது. நாளை (24.09.2020) வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் சிறப்புச் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தினேஷ் குண்டு ராவ் அவர்கள் நாளை (24.09.20) காலை 9.30 மணியளவில் சென்னை, மீனம்பாக்கம் விமானநிலையத்திற்கு வருகை புரிகிறார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக சிறப்பான வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பிற்கு பிறகு சென்னை, சத்தியமூர்த்தி பவனில் கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி காங்கிரஸ் கட்சியினரைச் சந்திக்கிறார்.

 

மாலை 3 மணிக்கு தமிழக காங்கிரசின் முன்னணி அமைப்புகள் மற்றும் இதர துறைகள் சார்ந்த தலைவர்கள், ஒழுங்கு நடவடிக்கைக்குழு உறுப்பினர்கள், சொத்து மீட்பு மற்றும் பாதுகாப்புக்குழு உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார்.

 

மேலும் செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார்.

 

மாலை 3.30 மணியளவில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார்.

 

Ad

 

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள அவசர சட்டத்தின் மூலம் விவசாயிகளின் எதிர்காலமே கேள்விக் குறியாகியிருக்கிறது. வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை பெறுகிற உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. விவசாயிகள் விளைபொருளை நியாயமான விலையில் சந்தையில் விற்பதற்கான ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் அடித்தளம் சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. காலம் காலமாக விவசாயிகள் பெற்றுவந்த  உரிமைகள் பறிக்கப்பட்டு கார்ப்பரேட்டுகளின் நலனைக் காப்பாற்றுகிற வகையில் மத்திய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது. இதை எதிர்த்துப் பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ள விவசாயிகள் ஆதரவு போராட்டத்திற்கான செயல் திட்டங்களை வகுப்பதற்காகவும், காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்து விவாதிப்பதற்காகவும் தினேஷ் குண்டு ராவ் அவர்களது வருகை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

 

எனவே, திரு தினேஷ் குண்டு ராவ் அவர்களைச் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக அழைக்கப்பட்டுள்ள அனைவரும் வருகை புரிந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து  ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஜி காங். தலைவர் கொலை வழக்கு; ஜூன் 5க்கு தள்ளி வைப்பு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ex tamilnadu Congress leader case was adjourned to June 5
தாளமுத்து நடராஜன்

தமிழகத்தையே உலுக்கிய சேலம் மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தாளமுத்து நடராஜன் (55). இவர், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு, ஒரு மர்மகும்பல் இவருடைய வீட்டுக்குள் நுழைந்தது. மர்ம நபர்கள், வீட்டுக் காவலாளி கோபாலை கொலைசெய்துவிட்டு, கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். அங்கிருந்த தாளமுத்து நடராஜனின் மகன்களை தாக்கி, தனி அறையில் அடைத்தனர்.

பின்னர் அந்த வீட்டில் இருந்த 250 பவுன் நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்கள், உள்பக்கமாக தாழிட்டு இருந்த மற்றொரு அறைக் கதவை தட்டினர். அப்போது துப்பாக்கி சகிதமாக வெளியே வந்த தாளமுத்து நடராஜனை கொள்ளையர்கள் இரும்புகம்பியால் அடித்துக் கொலை செய்தனர். அதையடுத்து அங்கிருந்து, இரட்டைக்குழல் துப்பாக்கி, கைத்துப்பாக்கி, நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

ex tamilnadu Congress leader case was adjourned to June 5
ஜெயில்தார் சிங்

தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்த இந்தச் சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தீவிர விசாரணையில், இந்தசம்பவத்தின் பின்னணியில் வட இந்தியாவைச் சேர்ந்த கொடூர கொள்ளை கும்பலான பவாரியா குழுவினருக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் மெத்தம் 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். கொள்ளை கும்பலின் தலைவனான ஓம் பிரகாஷ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அசோக் லட்சுமணன், ராகேஷ் குட்டு, ஜெயில்தார் சிங், ஷாண்டோ ஆகிய நான்கு பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை சேலம் 3ஆவதுகூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்துவிட்டது. இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் தங்கள் தரப்பிலும் சாட்சிகள் இருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும்ஜூன் 5ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ஸ்ரீராமஜெயம் உத்தரவிட்டுள்ளார். அரசுத்தரப்பில் வழக்கறிஞர் மணிகண்டன் ஆஜராகி வாதாடி வருகிறார். 

Next Story

வயநாட்டில் ராகுல் காந்திக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த செல்வப்பெருந்தகை!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
selvaperunthagai who collected votes in support of Rahul Gandhi in wayanad!

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை ஆதரித்து சுல்தான் பத்ரி தேர்தல் பொறுப்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான டாக்டர் எம்.கே.விஷ்ணு பிரசாத் தலைமையில் தமிழநாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சுல்தான் பத்ரீ கடைவீதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் கோவை மணிகண்ட பிரசாத்,  சிந்தை வினோத் மற்றும் ஏராளமான தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.