“எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்”- செல்வப்பெருந்தகை அறிவிப்பு!

TN Congress Committee Chairman selavaperunthagai press statement 

தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு பா.ஜ.க.வின் தற்காலிக பொறுப்பாளர் எச். ராஜா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி அமெரிக்கச் சுற்றுப்பயணத்தில் நிகழ்த்திய சந்திப்பைக் குறிப்பிட்டு மிகமிக இழிவாகத் தரம் தாழ்ந்து பேசியதைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த சந்திப்பு குறித்துப் பேசும் போது, ராகுல்காந்தியைத் தேசத்துரோகி என்று குற்றம் சாட்டியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

யாரைப் பார்த்து யார் தேசத்துரோகி என்று கூறுவது?. விடுதலைப் போராட்ட காலத்தில் 10 ஆண்டுக்காலம் சிறைவாசம் இருந்த பண்டித நேரு பாரம்பரியத்தில் வந்த ராகுல்காந்தியைப் பற்றி இழித்துப் பேசுவதற்கு எச். ராஜாவுக்கு என்ன உரிமை இருக்கிறது?. விடுதலைப் போராட்டத்தில் கடுகளவு கூட பங்கேற்காமல், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு வெண்சாமரம் வீசி ஏஜெண்டுகளாக இருந்த ஆர்.எஸ்.எஸ். வழி வந்த பா.ஜ.க.வினர், காங்கிரஸ் தலைவர்களைப் பற்றிப் பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை. இந்திய நாட்டின் ஒற்றுமைக்காகவும், ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காகவும் தமது இன்னுயிரைத் தியாகம் செய்த இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரின் பாரம்பரியத்தில் வந்த ராகுல்காந்தியைப் பார்த்துப் பேசுவதற்கு பா.ஜ.க.வினருக்கு எந்த தகுதியும் இல்லை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

TN Congress Committee Chairman selavaperunthagai press statement 

அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பிரதிநிதிகளுடன் நடந்த சந்திப்பை எச். ராஜா கொச்சைப்படுத்திப் பேசுவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விரோதமாகக் கருத்துகளைக் கூறுவது வகுப்புவாத விஷமத்தனமான கருத்துகளைப் பரப்புவது, மதநல்லிணக்கத்தை சீர்குலைப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் எச். ராஜாவின் பேச்சைக் கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அந்தந்த மாவட்டத் தலைவர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமும், ஒப்பற்ற தலைவருமான ராகுல்காந்தியை எவரும் இழித்துப் பேசுவதை அனுமதிக்க முடியாது. இத்தகைய அநாகரீகமான வகையில் பேசியுள்ள எச். ராஜாவுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிற வகையில், தமிழகம் முழுவதும் நாளை (17.09.2024) கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளின் சார்பாக நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

congress Selvaperunthagai
இதையும் படியுங்கள்
Subscribe