Skip to main content

சரத்குமார், ராதிகா தேர்தலில் போட்டியிடவில்லை!

Published on 15/03/2021 | Edited on 15/03/2021

 


சென்னை டி. நகரில் உள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் 37 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான சரத்குமார் வெளியிட்டார். வேட்பாளர் பட்டியல் வெளியானதும், கட்சி அலுவலகத்திற்கு வெளியே கட்சித் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். 

 

அதன்படி, தூத்துக்குடி- சுந்தர், மதுரை (தெற்கு)- ஈஸ்வரன், ராஜபாளையம்- விவேகானந்தன், சிவகங்கை- நேசம் ஜோசப், வாணியம்பாடி- ஞானதாஸ், விளாத்திகுளம்- வில்சன், முதுகுளத்தூர்- நவபன்னீர்செல்வம், சங்ககிரி- செங்கோடன், தென்காசி- தங்கராஜ், பத்மநாபபுரம்- ஜெயராஜ், அம்பாசமுத்திரம்- கணேசன், வாசுதேவநல்லூர் (தனி)- சின்னசாமி, அந்தியூர்- குருநாதன், ஆத்தூர் (தனி)- சிவா, விருதுநகர்- மணிமாறன், திருநெல்வேலி- அழகேசன், திருச்செந்தூர்- ஜெயந்திகுமார், கிருஷ்ணராயபுரம் (தனி)- சரவணன், பெரியகுளம் (தனி) அரசுப்பாண்டி, கிள்ளியூர்- ஆண்டனி, உத்திரமேரூர்- சூசையப்பர், விளவங்கோடு- அருள்மணி, கடலூர்- ஆனந்தராஜ், ஆலங்குளம்- செல்வக்குமார், திருச்செங்கோடு - குட்டி (எ) ஜனகராஜ், ராதாபுரம்- உத்திரலிங்கம், நாங்குநேரி- சார்லஸ் ராஜ், ஆம்பூர்- ராஜா, ஜோலார்பேட்டை- கருணாநிதி, போளூர்- கலாவதி, உளுந்தூர்பேட்டை- சின்னையன், ரிஷிவந்தியம்- சண்முகசுந்தரம், லால்குடி- முரளி கிருஷ்ணன், சிதம்பரம்- தேவசகாயம், சீர்காழி (தனி)- பிரபு, திருத்துறைப்பூண்டி (தனி)- பாரிவேந்தன், துறைமுகம்- கிச்சா ரமேஷ் ஆகியோர் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர் பட்டியலில் கட்சியின் தலைவர் சரத்குமார், ராதிகா பெயர் இடம்பெறவில்லை.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், "சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் அவர்களின் உழைப்பு, சேவையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். களத்தில் உள்ள வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி வாகை சூட வைக்க தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டியுள்ளது. அதனால், நானும் என் மனைவியும், முதன்மைத் துணைப் பொதுச் செயலாளருமான ராதிகாவும் தேர்தலில் போட்டியிடவில்லை" என்றார்.

 

மக்கள் நீதி மய்யம் தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் கூட்டணியில் தமிழ்நாடு இளைஞர் கட்சி இணைந்தது. இதனால், சமத்துவ மக்கள் கட்சியிடம் இருந்து 3 சட்டமன்றத் தொகுதிகள் திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சிக்குப் பொதுச் சின்னம் ஒதுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்கட்சி மனுத் தாக்கல் செய்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விருதுநகர் தொகுதியில் ராதிகாவுடன் பைக் சவாரி! சின்ராசாக மாறிய சரத்குமார்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Sarathkumar bike ride with Radhika in Virudhunagar constituency

விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் பிரச்சார அனல் கடுமையாக வீசுகிறது. பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சுற்றிச் சுழன்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். பிரச்சார வாகனத்தில் நின்றவாறு மைக் பிடித்து ஆதரவு கேட்கும் வழக்கமான நடைமுறையைக் கடைபிடித்து வருகிறார்கள். இவர்களிலிருந்து மாறுபட்ட வேட்பாளராகத் தன்னை வெளிப்படுத்தி வருகிறார் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்.

ராதிகா செல்லுமிடமெல்லாம் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை. சூர்யவம்சம் சின்ராசு என்று பிரச்சாரத்தில் தன் கணவர் சரத்குமாரைப் பெருமிதமாகச் சொல்லிவந்தார். சூர்யவம்சம் சினிமாவில் சின்ராசு, தன்னுடைய காதலியை பைக்கில் அழைத்துச் செல்வார். இந்தத் தேர்தல் களத்தில் நிஜத்திலும்,  தன் மனைவி ராதிகாவை பைக்கிலேயே  பிரச்சாரத்துக்கு அழைத்துச் செல்கிறார்.

Sarathkumar bike ride with Radhika in Virudhunagar constituency

திரையுலக நட்சத்திரங்களாக இருந்தும், சாதாரண மனிதர்களைப்போல், பொதுவெளியில் ராதிகாவும் சரத்குமாரும் டூ வீலரில்  செல்வது, விருதுநகர் தொகுதி வாக்காளர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 

Next Story

ராதிகாவும் ரசிகையும்..! பாயின்டுக்குப் பாயின்ட் ஷூட்டிங்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Radhika and Rasikai had a conversation during the campaign

விருதுநகர் அருகிலுள்ள பாலவநத்தம் கிராமத்தில்  பொது மக்களிடம் வாக்கு சேகரித்த விருதுநகர் பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமாரிடம்,  கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் வரும் ஒரு பாடலைப் பாடிக்காட்டினார், மூதாட்டியான பவுனுத்தாய். சினிமா ரசிகையான பவுனுத்தாய், ராதிகா கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு நேரடியாக பதில் கூறாமல், சினிமா மற்றும்  நடிப்பைப் பற்றியே பேசினார்.

பிரச்சார வாகனத்தில் ராதிகாவைப் பார்த்த பவுனுத்தாய், கிழக்குச் சீமையிலே  திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய  கத்தாழங் காட்டு வழி எனத் துவங்கும் பாடலின் வரியான ‘உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா’ என்று பாடினார். அவர் பாடியதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு, தான் பிரச்சாரம் செய்ய வந்ததையே மறந்தவராக,  மைக்கை பவுனுத்தாயிடம் நீட்டி  நேர்காணலே நடத்தினார் ராதிகா.

“ராதிகாவைப் பார்க்க வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாக ஆசை..”என்றார் பவுனுத்தாய். “எதற்காக?” எனக் கேட்டார் ராதிகா. “சினிமாவ ரொம்பவும் பார்ப்பேன். உங்க நடிப்பு எனக்குப் பிடிக்கும்.” எனப் பதிலளித்தார் பவுனுத்தாய். “எந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும்?” என ராதிகா கேள்வி கேட்க,“கிழக்குச் சீமையிலே” என பதிலளித்தார் பவுனுத்தாய். வந்த வேலையை மறந்துவிட்டு வாக்காளர் ஒருவரிடம் ஏதேதோ பேசுகிறோமே என்று சுதாரித்த ராதிகா  “நான் உங்ககிட்ட ஓட்டு கேட்க  வந்திருக்கேன். அது பிடிக்கிறதா?” என்று கேட்க, பவுனுத்தாய் “பிடிக்கும்..” என்றார். 

அவரை விட்டுவிட மனமில்லாத ராதிகா “நான் நன்றாகச் செயல்படுவேன் என்று நம்புகிறீர்களா?” என்று கொக்கி போட்டார். “உங்க மனசப் பொருத்தது..”   சாதுர்யமாகப் பேசினார் பவுனுத்தாய். “அப்படி ஒரு எண்ணம், என் முகத்தில்.. அகத்தின் அழகு முகத்தில் தெரியுதா?” பரிதவிப்புடன் கேட்டார் ராதிகா. ராதிகாவின் கேள்விக்கு  நேரடியாகப்  பதில் கூறாத பவுனுத்தாய், “உழுதபுழுதியிலும் உன் முகமே தெரியுதம்மா..” என்று  மீண்டும் பாடினார். “அப்படின்னா? உங்களுக்கு நம்பிக்கை இருக்குல்ல..” எனக் கேட்டார் ராதிகா. அதற்கு பவுனுத்தாய்  “எங்களுக்கு நம்பிக்கை இருக்கு.. ஆனால், ஆட்சிக்கு வர்றவுங்களுக்கு இருக்கணும்.” என்று கூற, இதை எதிர்பார்க்காத ராதிகா சிரித்து மழுப்பினார்.

தொடர்ந்து ராதிகா “உறுதியாக  நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உங்களுக்கு இருக்கிறதா?” என்று கேட்க, “வருவார்..” என்று சுரத்தில்லாமல் பதிலளித்தார் பவுனுத்தாய். அது தெலுங்கு பேசும் மக்கள் வசிக்கும் பகுதி என்பதால், அங்கு நின்றவர்களைப்பார்த்து “பாகு உன்னாரா?” என்று கேட்டார் ராதிகா. அதாவது, தெலுங்குமொழியில் நலம் விசாரித்தார். பவுனுத்தாயையும் விட்டுவிட மனமில்லாமல், அவர் பக்கம் திரும்பி “சரத்குமாரைப் பார்க்க வேண்டுமா?”  என்று கேட்டார்.

உடனே பவுனுத்தாய் “சரத்குமார் நடித்த சூர்ய வம்சம் படம் எனக்கு ரொம்பவும் பிடிச்ச படம்.” என்று முகம் மலர்ந்தார். “அந்தப் படத்துல நானும் நடிச்சிருக்கேன்.” என்று குஷியாகச் சொன்ன ராதிகா  “சரத்குமார் திருமங்கலத்துல பிரச்சாரம் பண்ணுறார்.” என்று கூறிவிட்டு, அடுத்த பாயின்ட்டுக்குக் கிளம்பினார்.

பிரச்சாரம் செய்வதற்கு ஒவ்வொரு வேட்பாளராக, ஒவ்வொரு கட்சியினராக, ஒவ்வொரு பகுதிக்கும் வந்து கொண்டேயிருக்கிறார்கள். பலரது உப்புச்சப்பில்லாத பிரச்சார உரையைக் கேட்டுக் கேட்டுச் சலித்துப்போன வாக்காளர்களுக்கு, ராதிகா என்ற சினிமா பிரபலத்தின் முகத்தைப் பார்த்ததும், அவங்களுடன் நேரில் பேசியதும், ஒரு சினிமா ஷூட்டிங்கைப் பார்த்த அனுபவத்தைத் தந்திருக்கும் என்றால் மிகையில்லை என்றனர்,  சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள்.