சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கட்சியின் மூத்த நிர்வாகிகள் செம்மலை, கே.பி.முனுசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், பொன்னையன், அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
'குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும். குடும்பத்திற்கு ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். 'அம்மா இல்லம்' என்ற திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வீடு கட்டித் தரப்படும். ரேஷன் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்படும். அம்மா வாஷிங் மெஷின் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். விலையில்லா கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும். மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். கரிசல், களிமண் எடுக்க தடையில்லா அனுமதி வழங்கப்படும். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கிடப்படும்.
ஆண்டு முழுவதும் கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். அமைப்புச்சாரா ஓட்டுநர்களுக்கு விபத்துக் காப்பீடு வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சோலார் சமையல் அடுப்பு வழங்கப்படும். பத்திரிகையாளர்களுக்கு குடியிருப்பு மனைகள் மற்றும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் அனைத்து சாதிகளுக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும். கல்வி, வேலை வாய்ப்பில் அனைத்து சாதியினருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும். நகரப் பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கு 50% கட்டணச் சலுகை வழங்கப்படும். மாணவர்களின் நலன் காக்க மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்தப்படும். அரசுப் பள்ளிகளில் உள்ள சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும். நெசவாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூபாய் 5,000 வழங்கப்படும். ஈழத் தமிழர் உள்பட 7 பேர் விடுதலைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 7,500 உழவு மானியம் வழங்கப்படும்' உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.