Skip to main content

த.மு.மு.க.வின் வெள்ளி விழா மாநாடு! ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்பு! 

Published on 05/09/2020 | Edited on 05/09/2020
jawahirullah

 

 

1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ல் தொடங்கப்பட்டு 2020- ஆம் ஆண்டில் வெள்ளிவிழா காணும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,  ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை காக்கும் பயணத்தில் கால் நூற்றாண்டை நிறைவு செய்கிறது.

 

இந்த வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நாளை 6-ந்தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாபெரும் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

 

கரோனா நோய்ப் பரவல் காரணமாகவும், பொதுமக்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டும் இணையம் வழியாகவே இம்மாநாட்டை நடத்திட முடிவெடுக்கப்பட்டது.

 

இரண்டு அமர்வாக நடைபெறவிருக்கும் இந்த இணைய வழி வெள்ளி விழா மாநாட்டில், மாலை 7 முதல் 10 மணி வரை த.மு.மு.க. தலைவர் பேரா.முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெறவுள்ள எழுச்சி அரங்கத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இலங்கையின் முன்னாள் மத்திய அமைச்சரும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் திரு. வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்  நல்லகண்ணு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.வி. தங்கபாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ், தமிழ் புலிகள் இயக்க தலைவர் நாகை திருவள்ளுவன் ஆகியோர் சிறைப்புரையாற்றகின்றனர்.

 

அதேபோல்,  தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி ஆர்.எம். அனிபா தலைமையில் காலை10.30 முதல் 1 மணி வரை நடைபெறவுள்ள முதல் அமர்வில் , நீதியரசர் ஜி.எம். அக்பர் அலி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எம். பஷீர் அஹ்மது, மூத்த வழக்கறிஞர் சேவியர் அருள்ராஜ், ஜமாத்துல் உலமா சபையின் துணைத் தலைவர் ரூஹீல் ஹக், பேரா. அ.மார்க்ஸ், பேரா. அருணன், மக்கள் கண்காணிப்பகத்தின் செயல் இயக்குனர் ஹென்றி திபேன், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் மாநில தலைவர் மவ்லவி ஹனிபா, வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் மேஜர் சையத் சஹாபுதீன், ஊடகவியலாளர்கள் வீரபாண்டியன், ஜென்ராம், ஆர்.நூருல்லா, டி.எஸ்.எஸ். மணி மற்றும் தோழமை இயக்கத்தின் இயக்குநர் அ.தேவநேயன் ஆகியோர்  பங்கேற்றுச் சிறப்புரையாற்ற உள்ளனர்.

 

இந்த நிகழ்வை www.tmmk.in என்ற இணையதளத்திலும், TMMK MEDIA  என்ற பெயரில் உள்ள யூடியூப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் நேரலை செய்ய த.மு.மு.க.வின் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஒருங்கிணைத்துள்ளனர். 

 

தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் பங்கேற்கும் வகையில், ஒரு அரசியல் கட்சின் வெள்ளி விழா மாநாடு இணைய வழி மூலம் நடப்பது இதுவே முதல்முறை என்கிறார்கள் த.மு.மு.க.வினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோடியின் வெறுப்பு பிரச்சாரம்; ஆக்சன் எடுக்குமா தேர்தல் ஆணையம்?- ஜவாஹிருல்லா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Jawahirullah said Election Commission should take action against Modi hate campaign

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் அனல் கக்கும் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் வெறுப்பு அரசியலை உமிழ்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ, "ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச்செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது என்றெல்லாம் கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித்  தலைகுனிய வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளைப் பேச மோடிக்கு ஏதுமில்லை.  

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்ட ரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார். குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அவரது உள்ளத்தில் உறைந்திருந்த  சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் பிரதமரான பிறகும் சற்றும் கரையவில்லை என்பதை அவரது பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை.

நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு, அப்பட்டமாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட்சியின் அருவருப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது. பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுவுநிலையை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இதை இந்தியத்தேர்தல் ஆணையம் மௌனமாகக் கடந்து போனால், அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் கருத்திற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திடவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

Next Story

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் (படங்கள்)

Published on 07/02/2024 | Edited on 07/02/2024

 

 

2024 ஆம் ஆண்டுக்கான மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம் இன்று (07-02-24) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.