tmk with BJP Alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

Advertisment

இத்தகைய சூழலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே மீண்டும் கூட்டணியை உருவாக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது. அதே சமயம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனிடம் செய்தியாளர்கள் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே மீண்டும் கூட்டணி அமைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு அவர்,“ 15 நாட்களுக்கு முன்பே ஒரு முறை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். எடப்பாடி பழனிசாமியை சந்தித்த போது அ.தி.மு.க. - தா.மா.க. கூட்டணிக்காக பேசாவிட்டாலும், நாட்டு நலன், எதிரிகளை வீழ்த்துவது குறித்து பேசினேன் என்று கூறுவதில் இருந்தே புரிந்து கொள்ளுங்கள். எதிரியை வீழ்த்த பலமான கூட்டணி தேவை என்று எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினேன். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி முறிந்த பிறகு இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும் எனவும், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி சேர்ந்தால் தான் தி.மு.க. கூட்டணியை எதிர்கொள்ள முடியும் எனவும் த.மா.கா. கூறிவருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் அ.தி.மு.க.வை - பா.ஜ.க. கூட்டணியில் இணைக்க ஜி.கே.வாசன் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடாத நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி உறுதியாகியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் ஏற்கெனவே இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது.