Skip to main content

“அன்று நாட்டுக்காக வரமுடியாதவர் இன்று ஓட்டுக்காக ஓடி வருகிறார்...” மோடி குறித்து திருச்சி சிவா

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பேராவூரணி வேதாந்தம் திடலில், திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு திமுக பேராவூரணி ஒன்றிய பொறுப்பாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் தனம் கோ. நீலகண்டன் வரவேற்றார். சேதுபாவாசத்திரம் வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் மு.கி.முத்து மாணிக்கம், தெற்கு ஒன்றியச் செயலாளர் வை. ரவிச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் என்.அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

 

siva

 

கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது, "இங்கே தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வாக்குகள் கேட்டு வந்துள்ளோம். ஆளுகின்ற கட்சியும் வாக்குகள் கேட்டு வருவார்கள். நீங்கள் வாக்களிக்கும்போது, உங்களுக்கு உதவியவர்கள் யார்?  உங்களோடு உறுதுணையாக நின்றவர்கள் யார் என சிந்தித்து வாக்களியுங்கள். உங்களுக்கு தனி மரியாதை தரக்கூடிய வாக்குச்சீட்டு உங்கள் கையில் உள்ளது. விலைக்கு விற்பதற்கல்ல என்பதை வாக்காளர்கள் உணரவேண்டும். 
 

பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றிய மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அகற்றப்பட வேண்டும். பாஜகவை விமர்சித்த அதிமுகவின் தம்பிதுரையும், அன்வர் ராஜாவும், இன்றைக்கு மாநிலத்தில் 8 ஆண்டு காலம் மக்கள் விரோத ஆட்சி நடத்துபவர்களும் பல்லக்கில் ஏறி பவனி வருகிறார்கள். மீண்டும் அவர்கள்தான் வரவேண்டும் என்கிறார்கள். இது சந்தர்ப்பவாதம் அல்லவா? 
 

2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது அளித்த வாக்குறுதி, வேலை இல்லாத் திண்டாட்டத்தை போக்குவேன். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவேன் என்பது. ஆனால், இப்போதுள்ள புள்ளிவிபரம் சொல்கிறது 6 கோடி பேர் வேலை இல்லாமல் உள்ளனர். ஒன்றரைக் கோடி பேர் இருந்த வேலையையும் இழந்துள்ளனர். 
 

பிஜேபி ஆட்சியில் இருந்தபோது இந்தியாவில் இருந்த பல்கலைக்கழகங்கள் 723, இப்போது இருப்பது 903. கூடியது 180, அதில் 140 தனியார் பல்கலைக்கழகங்கள். பல்கலைக்கழகங்கள் அதிகரித்திருப்பதால் வேலை வாய்ப்பு கூடியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அதற்கு மாறாக பணியில் இருந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேராசிரியர்கள் வேலை இழந்துள்ளனர். காரணம் தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்ததால், இருந்த வேலை வாய்ப்புகளும் பறிக்கப்பட்டது. வேலை தருவதாக மோடி தந்த வாக்குறுதி பொய்யாகிப்போனது. 
 


கஜா புயலால் இப்பகுதி மக்கள் வீடுகளை, தென்னந் தோப்புகளை, படகுகளை இழந்து வாழ வசதியற்று, கண்ணீர் வடித்தபோது எட்டிப் பார்க்காத, ஆறுதல்கூட கூறாத பிரதமர் மோடி, இப்போது வாக்குகளுக்காக 4 முறை தமிழகம் வந்துள்ளார். அன்றைக்கு நாட்டுக்காக வரமுடியாதவர் இன்று ஓட்டுக்காக ஓடி வருகிறார். ஆதாயத்துக்காக உங்களை தேடி வருபவர் உங்களுக்கு தேவையா. உங்களோடு சுகதுக்கங்களில் பங்குபெறும் நாங்கள் தேவையா?. 
 

5 ஆண்டு கால பாராளுமன்ற கூட்டத்தில் வெறும் 19 நாட்களுக்கு மட்டுமே வந்தவர்தான் பிரதமர் மோடி. கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஜனநாயகவாதிகள், ஏன் அவரது கட்சியைச் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட பலர் இன்றைக்கு எச்சரித்துள்ளனர். மீண்டும் பிரதமர் மோடி வந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் செத்துவிடும். அதிபர் ஆட்சி முறை வரும்” என்று பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்