Skip to main content

கதறி அழுத நகர செயலாளர்... ஆறுதல் கூறி அனுப்பி வைத்த கே.என்.நேரு...

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

 

தமிழக அரசியலில் தேர்தலில் வெற்றி பெறுபவர்களைவிட கட்சியில் பொறுப்பில் இருப்பவர்களுக்குத்தான் அதிக அதிகாரம் மற்றும் கட்சியின் செல்வாக்கு இருக்கும். இந்த கட்சி அதிகாரத்திற்காக அரசியலில் பலவிதமான போட்டிகளும் பொறாமைகளும், சதிதிட்டங்களும் நடக்கும். அரசியல் ஆடுகளத்தில் சதுரங்க காய் நகர்த்தல்கள் நகர்ந்து கொண்டே இருக்கும்.

 

dmk



புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட பொறுப்பாளரிடம், நகர செயலாளர் அவர்கள் கதறி அழுத சம்பவம் தற்போது திமுக கட்சியினரிடையே பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

திருச்சி திமுக மாநகரச் செயலாளர் அன்பழகன். அவருடைய ஆரம்பகட்ட அரசியலில் அன்பில் தர்மலிங்கம் மகன் அன்பில் பொய்யாமொழிக்கு நெருக்கமாக இருந்தவர். அதன் பிறகு கே.என்.நேருவுக்கு நெருக்கமாக மாறினார். அதன் பிறகு கவுன்சிலர், துணை மேயர் உள்ளாட்சி பொறுப்புகளின் உச்சத்திற்கு சென்றார்.
 

திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக போட்டியிட வாய்ப்பு தருமாறு பலமுறை கேட்டு ஒவ்வொரு முறையும் தோழமை கட்சிக்கு ஒதுக்கப்படுவதால் கடைசியாக எம்.பி. தேர்தலுக்கு வாய்ப்பு கிடைத்து தோற்றுப் போனார்.
 

திருச்சி மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படும்போது தனக்கு கண்டிப்பாக கட்சியில் மாவட்ட அளவுல் பதவி கிடைக்கும் என்று மிக உறுதியாக நம்பினார். அவருக்காக கே.என்.நேரு, என்னுடைய இடத்தை அன்பழகனுக்கு கொடுங்கள் என்று தலைமையிடம் சிபாரிசு செய்தார்.
 

ஆனால் பொய்யாமொழி மகன் அன்பில் மகேஷ்பொய்யாமொழி மாவட்ட பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டதால் பயங்கர அப்செட் ஆனார். இந்த நிலையில் திருச்சி மாநகரத்தில் உள்ள தொகுதிகள் பிரிந்து போனதால் தற்போது தன்னுடைய மாநகர செயலாளர் பதவியும் செல்லாக்காசு ஆகிவிடும் என்பதை உணர்ந்ததும் இன்னும் மன உளைச்சலுக்கு உள்ளானார்.
 

இந்த நேரத்தில் திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, அன்பழகன் வீட்டிற்கு வாழ்த்து பெறுவதற்காக சென்றார். அப்போது வைரமணியை பார்த்தவுடன் கண்ணீர் விட்டு கதறி அழ ஆரம்பித்தார். வாழ்த்து சொல்லுவார் என்று எதிர்பார்த்து சென்ற புதிய மாவட்ட பொறுப்பாளருக்கு பெரிய தர்மசங்கடமானது. என்ன சொல்லி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் அங்கிருந்து நகர்ந்தார்.


 

 

அன்பழகன் சென்னைக்கு சென்றபோதும், இதேபோல் கே.என்.நேருவிடமும் கதறி அழுதிருக்கிறார். அப்போது நேரு, வரும் தேர்தலில் எம்எல்ஏ சீட்டு கிடைக்கும், கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார். 
 

தனக்கு பதவி கிடைக்கும் என்று கடைசி வரை நம்பிக்கையோடு அன்பழகன் இருந்தார். பதவி கிடைக்காததால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் அப்செட்டாகி உள்ளார் என்கிறார்கள் அன்பழகனுடன் இருப்பவர்கள். 
 

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கின்றனர் கட்சிக்காரர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது