Skip to main content

"ஆன்மீகம் எனும் பெயரில் ஆளுநர் மதவாதம் பேசுகின்றார்" - திருமாவளவன் பேட்டி

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

Thol Thirumavalavan addressed press and comment on Governor RN Ravi

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், கடலூரில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில், கடலூர் சுற்றுலா மாளிகையில் அவரும் தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

அப்போது திருமாவளவன், “குஜராத்தில் மோர்பி எனுமிடத்தில் தொங்குபாலம் இடிந்து 130க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கோர விபத்தில் உயிரிழந்த  ஒவ்வொருவருக்கும் இந்திய அரசும், குஜராத் அரசும் இணைந்து இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். வருங்காலத்தில் இதுபோன்ற விபத்து நடைபெறாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

கோவை சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜகவும், ஆளுநரும் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கின்றது. தி.மு.கவுக்கு எதிராக அவர் வகிக்கும் பதவிக்கு முரண்பாடாக ஆளுநரே ஆர்.எஸ்.எஸ் தொண்டர் போல செயல்படுகின்றார். ஆன்மீகம் என்னும் பெயரில் ஆளுநர் ஆர்.என்.ரவி மதவாதம் பேசுகின்றார். கோவையில் நடைபெற்றது விபத்தோ அல்லது தாக்குதலோ என்று தெரியாத நிலையில் முபின் தொடர்பாக உளவுத்துறை எந்தவொரு தகவலும் அளிக்கவில்லை. அரசுக்கு கலங்கம் விளைவிக்கவே பேசி வருகின்றனர்.

 

இவ்வழக்கை தேசியப் புலனாய்வு முகமை எடுத்து விசாரிக்க வேண்டும். இச்செயலில் பா.ஜ.கவை வி.சி.க. கடுமையாகக் கண்டிக்கின்றது. தமிழக அரசு அலட்சியமாக இருந்துவிட்டதாக பாஜக காண்பிக்க முயற்சி செய்கின்றது. மதவாத அரசியலுக்குத் தமிழகத்தில் இடமில்லை.

 

அண்ணாமலைக்கு 'விளம்பரமேனியா என்னும் நோய் உள்ளது' அரசியலை அரசியலாக எதிர்கொள்ள வேண்டும். தனிநபர் பெயர் உச்சரித்து விமர்சனம் செய்வது அரசியல் அநாகரீகமானது. இந்தித் திணிப்பு என்பது ஊரறிந்த, உலகறிந்த உண்மை. நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றி விட்டனர். 70% மாற்றிவிட்டோம் என பெருமை பேசுகின்றனர். அதிகம் இந்தி உள்ள மாநிலங்களில் இம்முடிவு எடுக்கலாம். மற்ற மாநிலங்களில் இந்தியைத் திணிப்பதை ஏற்க முடியாது. இது ஐனநாயகத்திற்கு எதிரானது. அவர்கள் மதவாத தேசியவாதிகள். நவம்பர் 6-ஆம் தேதி 1 லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்ட 'மனுஸ்மிரிதி' தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யவுள்ளோம்" என்றார். பேட்டியின் போது கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் பா.தாமரைச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியாவின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்கிய நாள்” - தொல்.திருமாவளவன்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
today India redemption started writing from Tamil Nadu says Thirumavalavan

சிதம்பரம் நடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட அவரது சொந்த ஊரான அங்கனூர்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தனது தாயாருடன் வாக்களித்தார்.

இதனைதொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே வந்து பேசுகையில், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கு எதிரான தேர்தல் அல்ல. சங்‌பரிவார் மற்றும் இந்திய மக்களுக்கு இடையேயான தர்ம யுத்தம்.  நாட்டு மக்கள் வெற்றிபெற வேண்டுமென்பதற்காக இந்தியா கூட்டணி மக்கள் பக்கம் நிற்கிறது.‌ இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும்.‌ நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.‌தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களிலும் வெற்றி பெறும்.

கூட்டணி பலம், திமுக அரசின் மூன்றாண்டுகள் நலத்திட்டங்கள், இந்தியா கூட்டணியின் நோக்கங்களால் எங்கள் அணி மாபெரும் வெற்றி பெறும். இந்த தேசத்தின் மீட்பை தமிழகத்தில் இருந்து எழுதத் தொடங்குகிறோம் என்பதை அறிவிக்கும் நாள் இன்று. தமிழ்நாட்டுப் பெண்கள் திமுக அரசின் மீது நன்மதிப்பை கொண்டுள்ளனர். டெல்லியில் பாஜக வென்றால் மாநில அரசுகளை கலைக்கும் நிலை வரலாம், அப்படி நடந்தால் மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்து வரலாம்.‌ தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். சிதம்பரம் தொகுதியில் பானை சின்னம் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும்” என்றார்.

Next Story

“உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும்” - திருமாவளவன் பாராட்டு 

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
thirumavalavan praised vetrimaaran gopi nainar manushi movie trailer

வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வரும் வெற்றிமாறன், உதயம் என்.எச்.4, பொறியாளன், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே உள்ளிட்ட பல்வேறு படங்களைத் தயாரித்துள்ளார். கடைசியாக ஆண்ட்ரியா ஜெர்மியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான 'அனல் மேலே பனித்துளி' படத்தைத் தயாரித்திருந்தார். 

இப்போது சூரி ஹீரோவக நடிக்கும் கருடன் படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடெக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே அறம் பட இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஆன்ரியா நடிப்பில் மனுசி என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கும் நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்ரியாவின் பிறந்தநாளில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. சூர்யா இதனை வெளியிட்டிருந்தார். 

இதையடுத்து இப்படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு விஜய் சேதுபதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது ட்ரைலரை விஜய் சேதுபதி தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். ட்ரைலரை பார்க்கையில், அப்பா பாலாஜி சக்திவேலும், மகள் ஆன்ரியாவும் ஒரு வழக்கு சம்மந்தமாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்கிறது. அங்கு வைத்து இருவருக்கும் காவல் துறையினருக்கும் நடக்கும் விசாரணையை வைத்து இந்த ட்ரைலர் உருவாகியுள்ளது. மேலும் எந்த வழக்கிற்காக அவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர், இறுதியில் என்ன நடந்தது என்பதை அழுத்தமான காட்சிகளுடன் அரசியல் வசனங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. 

ட்ரைலரில் “போலிஸ் உன்ன தேடி வருதுனா, அது அவுங்களோட பிரச்சனை இல்லை இந்த நாட்டோட பிரச்சனை, சாதி ஜனநாயகமா, சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியாவை உருவாக்குனாங்க” போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதனிடையே வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன், இப்படத்தின் ட்ரைலரை பார்த்து படக்குழுவை பாரட்டியுள்ளார். அவர் பேசுகையில், “வசனங்கள் மிக ஆழமானதாக இருக்கிறது. இதுவும் உலகளவில் பேசப்படும் திரைப்படமாக அமையும். தயாரிப்பாளரும் இயக்குநரும் முற்போக்கு பார்வையுள்ளவர்களாக இருப்பது, இந்தத் திரைப்படத்தின் வெற்றியாக பார்க்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.