Skip to main content

11 எம்.எல்.ஏ.க்களையும் உச்சநீதிமன்றம் நிச்சயம் தகுதி நீக்கம் செய்யும்: திருமாவளவன் நம்பிக்கை

Published on 28/04/2018 | Edited on 28/04/2018
Thol. Thirumavalavan



11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்றும், உயர்நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தாலும் உச்சநீதிமன்றம் இந்தப் பதினோரு பேரையும் நிச்சயம் தகுதி நீக்கம் செய்யுமென்று உறுதியாக நம்புகிறோம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திரு எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பதினோரு பேரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 

ஒரு உறுப்பினர் கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களித்தால் அவரது பதவி பறிக்கப்படும் என கட்சித்தாவல் தடை சட்டம் கூறுகிறது. இதைத் தெரிந்தே ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அப்படி இருந்தும் அவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தான், திமுகவும் வேறு சிலரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

 

கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களிக்கப்பட்டிருக்கிறதா? அது தகுதி நீக்கத்துக்கு உரியதுதானா ? என்று தான் உயர்நீதிமன்றம் ஆராய்ந்திருக்க வேண்டும். அங்கே வாதாடிய வழக்கறிஞர்களும் அதைத்தான் வலியுறுத்தினார்கள். ஒ.பன்னீர்செல்வமும் மற்றவர்களும் தாங்கள் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்று மறுப்பு எதுவும் சொல்லவில்லை. எனவே, உயர்நீதிமன்றம் அவர்களைத் தகுதிநீக்கம் செய்திருக்கவேஎண்டும். 
 

சபாநாயகர் தனது பொறுப்பை நிறைவேற்றாதபோது நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளால் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் சாபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சபாநாயகருக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளதா என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது என்ற காரணங்களைச் சொல்லி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்புச் சட்டம் தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் தமது பொறுப்பை உயர்நீதிமன்றம் தட்டிக்கழித்திருப்பதாகவே இதைக் கருதத் தோன்றுகிறது.
 

பாஜக முட்டுக்கொடுப்பதால் தான் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஆட்சி நீடிக்கிறது என மக்களிடம் பரவலான கருத்து உள்ளது. அதற்காக தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளில் அது தலையிட்டு செல்வாக்கு செலுத்துகிறது என்றும் மக்கள் கருதுகின்றனர். நீதித்துறைமீதான நம்பிக்கை மட்டும்தான் இப்போது எஞ்சி நிற்கிறது. இத்தகைய தீர்ப்புகளால் அந்த நம்பிக்கையும்கூட பொய்த்துப்போய்விடும் பொலத் தெரிகிறது.
 


இப்போது சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தாலும் உச்சநீதிமன்றம் இந்தப் பதினோரு பேரையும் நிச்சயம் தகுதி நீக்கம் செய்யுமென்று உறுதியாக நம்புகிறோம். ’தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி’ என்பதை உணர்ந்து உசநீதிமன்றம் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Case against Nayanar Nagendran High Court action order

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றிக் கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும், பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர். மேலும், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை விவரம் (FIR) வெளியாகி இருந்தது. அதில் ரயிலில் எடுத்துச் செல்லப்பட்ட பணம் திருநெல்வேலி வாக்காளர்களுக்கு கொடுக்க என்றும், இந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும் கைதானவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக பதிவாகி இருந்தது.

இத்தகைய சூழலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்றும், “சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை” நடவடிக்கை எடுக்க  வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.

Case against Nayanar Nagendran High Court action order

இந்நிலையில் இந்த முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான நிரஞ்சன், “இந்த பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் வருமான வரித்துறையினருக்கும் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ‘இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது’ எனத் தெரிவித்து சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தனர்.