Skip to main content

கடிதம் எழுதிய சிறிது நேரத்தில் மரணமடைந்த அறிவாலய தொண்டர்! கடிதத்தைப் பார்த்து கலங்கிய உதயநிதி!

Published on 18/07/2020 | Edited on 18/07/2020
thiruvarur kandasamy dmk

 

உடன்பிறப்புகளால் அத்தனை எளிதாக அந்த முகத்தை மறக்க முடியாது. அறிவாலயத்தில் எந்த விழா என்றாலும் அவர் முன்கூட்டியே வந்துவிடுவார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பார். கட்சிப் பிரமுகர்களை வரவேற்று, உரிய இடத்தில் உட்கார வைப்பார். மேடையில் இருப்போருக்கு உதவிகள் செய்வார். கலைஞர், பேராசிரியர், ஸ்டாலின் என அனைவரும் அறிந்த கந்தசாமிக்கு மற்றொரு பெயர், அர்ப்பணிப்பு.

 

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி, தென்சென்னை மாவட்ட இலக்கிய அணியில் பொறுப்பில் இருந்தார். சென்னையில் தி.மு.க நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அதனைத் தெரிந்துகொண்டு அங்கு சென்று விடுவார். டீ, காபி தனித்தனி ஃப்ளாஸ்க்கில் இருக்கும். அதில் சர்க்கரை போட்டது, போடாதது எனத் தனித்தனியாக வீட்டிலிருந்தே தயாரித்து எடுத்துச் செல்வது கந்தசாமியின் வழக்கம். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், சிறப்பு விருந்தினர்களுக்குத் தருவார். கூட்டம் தொடங்கி சற்று தாமதமாக வரும் நிர்வாகிகளை முன் வரிசையில் உட்கார வைப்பதற்காகவே சில நாற்காலிகளைத் தனியாக எடுத்து வைத்திருப்பார். யாரிடமும் பாகுபாடு பார்க்க மாட்டார்.

 

கட்சி நிகழ்ச்சிகள், பிரமுகர்கள் வீட்டுத் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கான பத்திரிகைகளை அவரே வீடு வீடாகச் சென்று கொடுப்பார். நிர்வாகிகளின் பிறந்தநாளில் நேரடியான முதல் வாழ்த்து கந்தசாமி பரிசளிக்கும் புத்தகமாகத்தான் இருக்கும். சால்வைக்குப் பதில் புத்தகம் கொடுங்கள் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சொன்னதை வேதப்புத்தகமாகக் கருதி செயல்பட்டவர் கந்தசாமி. கட்சிக்காரர்களுக்கு உடன்பிறப்பு என்ற சொல்லின் அர்த்தத்தைத் தன் செயல்பாடுகளால் உணர்த்தியவர்.

 

கரோனா காலத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டதால், யாரிடமும் சொல்லாமல் சென்னை ஜி.ஹெச்சில் அட்மிட்டானார் கந்தசாமி. கட்சி நிகழ்ச்சிகளுக்கு முரசொலி நிருபர் வர இயலாத சூழலில், கந்தசாமியே அந்த நிகழ்ச்சி பற்றியும் அதில் பங்கேற்றவர்கள் பற்றியும் எழுதி அனுப்புவார். அதுபோல, ஜி.ஹெச்.சில் அட்மிட்டானதையும், தி.மு.க.வில் தன்னுடைய பங்களிப்பைப் பற்றியும் முரசொலிக்கான குறிப்பாக ஒரு தாளில் எழுதினார். அதனை எழுதிய சிறிது நேரத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார் கந்தசாமி.

 

அதிர்ச்சித் தகவல் அறிந்து தி.மு.கவினர் கண்ணீர் வடித்தனர். வர்த்தகஅணி மூலம் செய்தி அறிந்த தயாநிதி மாறன் எம்.பி தனது செயலாளர் கவுதம் மூலம் உரிய உதவிகளை மேற்கொண்டார். இளைஞரணிச் செயலாளரும் முரசொலி எம்.டி.யுமான உதயநிதி மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தி, கந்தசாமியின் கடிதத்தைப் பார்த்துக் கலங்கினார்.

 

http://onelink.to/nknapp

 

சென்னை தெற்கு மா.செ. சுப்ரமணியம், வர்த்தகர் அணிச் செயலாளர் காசி முத்துமாணிக்கம், துணைச் செயலாளர் வி.பி.மணி உள்ளிட்டோர் கந்தசாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, அவரது உடலைச் சொந்த ஊர் கொண்டு செல்ல உதவினர்.

 

அறிவாலயத் திருச்சேவை தவிர வேறெதுவும் அறியாத அந்தத் தொண்டனின் உடல் சுமந்த வாகனத்தை, அறிவாலய வாசலில் சில நிமிடங்கள் நிறுத்தி கொண்டு போகச் செய்தார் வர்த்தக அணி துணைச் செயலாளர் வி.பி.மணி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.