Skip to main content

6வது முறையாக திருமாவளவன் போட்டி; மும்முனை களமாக மாறிய சிதம்பரம் தொகுதி!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Thirumavalavan is contesting for the 6th time in Chidambaram parliamentary constituency

திமுக கூட்டணியில் சிதம்பரம் (தனி) தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில், தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள தொல். திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். இவர், அக்கட்சியின் தலைவராக உள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த திருமாவளவன் (61),  சென்னை மாநிலக் கல்லூரியில் இளங்கலை வேதியியல், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை குற்றவியல் பயின்றவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். திருமணம் செய்து கொள்ளவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் எனப் பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு மக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார். ஆதிதிராவிட மக்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல்; தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல்; சாதிய அடக்குமுறைக்கு எதிராகக் கருத்திடுதல்; தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், தனித்தமிழீழக் கொள்கைக்கும் ஆதரவளித்தல்; இந்துத்துவ கொள்கையினை எதிர்த்தல் போன்றவை அவரது முக்கியக் கொள்கைகளாகும். இவர் சிதம்பரம் மக்களவை (தனி) தொகுதியில் 5 முறை போட்டியிட்டு, இரு முறை வெற்றி பெற்றுள்ளார். தற்போது நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் 6 ஆவது முறையாக திமுக கூட்டணியில் தனிச் சின்னமான பானை சின்னத்தில் அவர் களம் காண்கிறார். சென்னையில் தங்கியுள்ளார்.

Thirumavalavan is contesting for the 6th time in Chidambaram parliamentary constituency

அதேபோல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அதிமுக சார்பில், சிதம்பரம் தொகுதியில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளராகப் பணியாற்றி வரும் மா. சந்திரகாசன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 1952 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்துள்ளார். முதுகலை பட்டம் பெற்ற இவர், கட்சியின் செந்துறை ஒன்றிய கவுன்சிலராகப் பணியாற்றி வருகிறார். 2001 முதல் 2006 வரை செந்துறை ஒன்றிய குழு பெரும் தலைவராகப் பணியாற்றியுள்ளார். இவர் வேளாண்துறையில் உதவி வேளாண் அதிகாரியாகப் பணியாற்றி வந்த நிலையில், கட்சியின் பணிக்காக அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தொடர்ந்து கட்சியில் பணியாற்றி வருகிறார்.

கட்சி சார்பில் நடத்திய பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றுள்ளார்.  கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது இவரது மனைவி அம்பிகா சந்திரகாசன் அரியலூர் மாவட்ட செந்துறை வார்டு பகுதிக்குட்பட்ட மாவட்ட கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். இவரது குடும்பம் அதிமுக கட்சி குடும்பம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சிதம்பரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது. இவர்கள் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.