Skip to main content

''சினிமா ஹீரோ வேஷத்தோடு வந்திருக்கிறார்கள்; எச்சரிக்கையா இருங்க''-திருமாவளவன் பேச்சு

Published on 15/06/2025 | Edited on 15/06/2025
'They have come disguised as movie heroes; we must be careful' - Thirumavalavan's speech

‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இருந்து 2.8 கி.மீ தூரத்திற்கு இன்று (14-06-25) பேரணி நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிப்பதை கைவிட வேண்டும் என்று உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்து ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற தலைமையில் திருச்சியில் விசிக சார்பில் பேரணி நடைபெற்றது. திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேடையில் பேசிய திருமாவளவன், ''புகழ்பெற்ற தலைவராக விளங்கும் புரட்சியாளர் அம்பேத்கர் ஒவ்வொரு நாளும் கோட்டு சூட்டோடு தான் வெளியே போவார். அந்த குடும்பம் வறுமையில் உழன்ற போதும் உடையிலே கவனம் செலுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர். இன்று என்னுடைய தம்பிகள்  அத்தனை பேரும் என்னுடன் கோட் சூட்டோடு நிற்கிறார்கள். ப்ளூ ஷர்ட்; ப்ளூ பேண்ட்; வைட் ஷர்ட்; ரெட் கலர் டை என அம்பேத்கர் மாதிரி நடக்கணும், அம்பேத்கர் மாதிரி நீ உணரனும். சனாதன சக்திகளே அம்பேத்கர் இறந்து விட்டார் என்று நினைக்காதீர்கள். இதோ இதோ அம்பேத்கரின் பிள்ளைகள் இருக்கிறோம்.

அரசியல் என்பது எவ்வளவு தில்லுமுல்லு உங்களுக்கு தெரியும். இதே திருச்சியில் இந்த பேரணி நடத்துவதற்கு முதலில் அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். நாம் ஆளும் கட்சி கூட்டணியில் தான் இருக்கிறோம். காவல்துறை தான் சொன்னார்கள் எங்களுக்கு அனுமதி தர சொல்லி மேல் இடத்திலிருந்து எந்த இன்ஸ்ட்ரக்ஷனும் வரவில்லை என்றார்கள். உயர்நீதிமன்றத்தின்  தீர்ப்புபடி  தமிழ்நாடு முழுக்க  கொடிக்கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும். மற்ற கட்சி கொடி கம்பங்கள் எல்லாம் அப்படியே இருக்கிறது. போலீசுக்கும் ஹைவேஸுக்கும் இதுதான் ஒரு வாய்ப்புன்னு உடனே இறங்கிட்டான் களத்திலே. சிறுத்தைகள் கொடியெல்லாம் இடிடா என்கிறான். இவ்வளவு நெருக்கடிகளையும் தாங்கிக் கொண்டு இந்த களத்தில் நிற்கின்ற இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி. திருமாவளவனுக்கு அரசியல் பண்ண தெரியல; பேரம் பேச தெரியல; பிளாக் மெயில் பண்ண தெரியல, துணை முதலமைச்சர் வேண்டும் என்று கேட்க மறுக்கிறார் என்கிறார்கள். முதலமைச்சர் பற்றியே நாங்கள் கவலைப்படவில்லை. இதில் துணை முதலமைச்சர் பதவி  பற்றி கவலைப்படுவோமா? எங்கள் தந்தை புரட்சியாளர் அம்பேத்கர் பிரதமரை கைப்பற்றுங்கள் என்றுதான் வழிகாட்டி இருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தோடு நாம் கொண்டிருக்கும் உறவு என்பது கொள்கை உறவு. இடங்களைப் பற்றி பேச்சுவார்த்தையில் முடிவு செய்து கொள்வோம். அது வேறு ஆனால் திமுக அரசோடு எங்களுக்கும் இருக்கின்ற விமர்சனங்களை தாண்டி நாங்கள் தேர்தல் உறவை வைத்துக் கொள்கிறோம் என்று சொன்னால் அது தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கொள்கை முடிவு. அந்த பிஜேபினுடைய செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பல பேர் பல வேஷம் போடுகிறார்கள். சில பேர் சினிமா புகழோடு வந்திருக்கிறார்கள். ஹீரோ என்கிற வேஷத்தோடு வந்திருக்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்