
சாதி சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்ததாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் அருகே தீக்குளித்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்த நிலையில் அது குறித்து தானாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது.
இந்நிலையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், மலைகுறவர் சமுதாயத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற இளைஞர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்காத மன உளைச்சலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். கடந்த 100 நாட்களில் பழங்குடியினர் சாதி சான்றிதழ் கிடைக்காததால் நிகழ்ந்துள்ள இரண்டாவது தற்கொலை இதுவாகும். இதற்கு முன் கடந்த ஜூலை 4-ஆம் தேதி கொண்டாரெட்டி சாதி சான்றிதழ் கிடைக்காததால் பெரியசாமி என்ற முதியவர் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

கொண்டாரெட்டி, மலைக்குறவர் ஆகிய இரு சாதிகளும் பழங்குடியினர் பட்டியலில் முறையே 12, 23 ஆகிய இடங்களில் உள்ளன. விண்ணப்பித்த ஒரு மாதத்தில் சாதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என விதி உள்ள நிலையில், சாதி சான்றிதழ் மறுக்கப்படுவது தான் தற்கொலைகளுக்கு காரணம் ஆகும். பழங்குடியின சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை என்பதற்காக இனியும் ஒரு தற்கொலை நிகழக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை எளிமையும், செம்மையும் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)