
மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று (01.06.2025) தொடங்கியது. பொதுக்குழு மேடைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் உள்ள அண்ணா, கலைஞர், அன்பழகன் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரியார் சிந்தனையாளர் ஆனைமுத்து, போப், சீதாராம் யெச்சூரி, சங்கரய்யா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேநேரம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி நடைபெற இருக்கும் ராஜ்ய சபா தேர்தலில் அதிமுக இரண்டு இடங்களில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் வழங்கப்படும். அதிமுக-தேமுதிக கூட்டணி நல்ல முறையில் தொடர்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா பேசுகையில், '' திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். அதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திமுகவிற்கும் தேமுதிக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். விஜயகாந்த் மறைவின்போது அரசு மரியாதை செலுத்தி எங்கள் துயரத்தில் பங்கேற்றார்கள்.அந்த நாட்களை என்றைக்கும் நாங்கள் மறக்க மாட்டோம். அந்த வகையில் விஜயகாந்துக்கு இரங்கல் தீரமானம் நிறைவேற்றியதற்கு எங்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

2026 ல் தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் தரப்படும் என்று அதிமுக தரப்பில் அறிவிப்பு வந்திருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் ஒரு விஷயத்தை சொல்லணும் என நினைக்கிறேன். 2024 பாராளுமன்ற தேர்தலின் போது 5 எம்பிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் தேமுதிகவுக்கு உறுதி செய்யப்பட்டது. இதில் எந்த மாற்றுக் கருத்து கிடையாது. எடப்பாடி பழனிசாமி மற்றும் மூத்த அமைச்சர்கள் எல்லோருமே ஒரு ராஜ்யசபா சீட்டை உறுதிசெய்து வாய் வழியாக மட்டுமல்ல எழுத்துப்பூர்வமாகவும் தந்தது உண்மைதான். ஏன் நாங்கள் இத்தனை நாட்களாக சொல்லவில்லை என்றால் அறிவிக்க வேண்டிய இடத்தில் அதிமுக இருக்கிறது.
ஏற்கனவே அன்புமணிக்கும், ஜி.கே.வாசனுக்கும் அதிமுக சார்பில் ராஜ்யசபா சீட்டு தரப்பட்டிருக்கிறது. இது எங்களுடைய முறை என உறுதி செய்யப்பட்டு கடிதம் வாயிலாகவே கையெழுத்து போட்டு கொடுத்தார்கள். அதனால் தான் அறிவிக்க வேண்டியது அவர்கள் கடமை என உறுதியாக இருந்தேன். ஆனால் இன்று அவர்களுடைய கடமையை ஆற்றியுள்ளார். 2026 ராஜ்ய சபா சீட்டு என அறிவித்திருக்கிறார்கள். இங்கே நான் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரசியல் என்பது தேர்தலை ஒட்டி தான். எனவே 2026 தேர்தலை ஒட்டி தான் ராஜ்யசபா சீட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. யாருடன் கூட்டணி என்பதை ஜனவரியில் தான் அறிவிப்போம்'' என்றார்.