சமீப காலமாக தினகரன், தங்க தமிழ்செல்வனின் மோதல் போக்கு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரனை தங்க தமிழ்ச்செல்வன் திட்டுவது போல ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து இனிமேல் தினகரனின் அமமுக கட்சியில் இருக்கப்போவதில்லை என்று அறிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் காய் நகர்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களை இன்று சந்தித்து தங்க தமிழ்ச்செல்வன் பேசும் போது, தான் திமுக, அதிமுகவில் இணையப்போவதில்லை என்று தெரிவித்து உள்ளார். மேலும் அமமுகவில் நிர்வாகம் மொத்தமாக சரியில்லை. தினகரன் 'ஒன் மேன் ஆர்மி'யாக தன்னை நினைத்து செயல்படுவதால், பலர் வெளியே வந்துவிட்டனர். மீதி இருப்பவர்களும் வெகு விரைவில் வெளியேறி அந்தக் கட்சியின் கூடாரமே காலியாகி விடும் என்றார். மேலும் சசிகலாவை சந்தித்து பேசினீர்களா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, சசிகலாவை சந்திக்க முடியவில்லை, வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என்று கூறினார். தற்போது நான், திமுகவுடனும், அதிமுகவுடனும் நான் இணையப்போவதில்லை என்று கூறினார்.