Skip to main content

தெலங்கானாவில் ஒன்றுகூடிய 4 மாநில முதல்வர்கள்; வலுப்பெறும் பாஜகவிற்கு எதிரான கூட்டணி

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

Telugu Chief Minister Launches National Party; 4 State CM's participated

 

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தனது கட்சியின் பெயரான தெலங்கானா ராஷ்டிர சமிதி என்பதை பாரத் ராஷ்டிர சமிதி எனப் பெயர்மாற்றம் செய்துள்ளார். 

 

இந்தப் பெயர்மாற்றத்திற்கு பிறகு பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் பொதுக்கூட்டம் தெலங்கானாவின் கம்மம் பகுதியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

இந்நிகழ்வில் பேசிய சந்திரசேகர ராவ், “நாட்டில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனைகளான மாநிலங்களுக்கு இடையே இருக்கும் நதிநீர்ப் பங்கீடு பிரச்சனைகள், பணமதிப்பிழப்பு, வேலைவாய்ப்பு, தனியார்மயமாக்கல் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதே பாரத் ராஷ்டிர சமிதியின் முக்கிய நோக்கம்” எனக் கூறினார்.

 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “நாட்டின் வளர்ச்சிக்கு முதலமைச்சர்கள் 24 மணிநேரமும் பாடுபட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அரசுகளுக்கு நெருக்கடிகளை அளிப்பது குறித்தே மோடி சிந்திக்கிறார். டெல்லிக்கு டெல்லி ஆளுநர்; பஞ்சாபிற்கு பஞ்சாப் ஆளுநர்; தெலங்கானாவிற்கு தெலங்கானா ஆளுநர் எனத் தொடர்ந்து ஆளுநர்களால் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இது ஆளுநர்கள் கொடுக்கும் நெருக்கடி அல்ல. மோடி கொடுக்கும் நெருக்கடி. தற்போது நாடு மாற்றத்தை விரும்புகிறது. வருகிற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இன்னும் எத்தனை நாள் காத்திருக்கப் போகிறீர்கள்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் இதுதான் நடக்கும்” - காங்கிரஸ் முதல்வர் எச்சரிக்கை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Telangana Chief Minister warns This is what will happen if BJP comes to power

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது.

அதே வேளையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. அதில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, நேற்று (25-04-24) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறும் வகையில் 400 இடங்களைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. இது ரிசர்வேஷன் முறையை ரத்து செய்யும் மசோதாவை நிறைவேற்ற உதவும். பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரிசர்வேஷனை தான் ஒழிக்கும். ஆர்.எஸ்.எஸ் அதன் தலைவர்கள் பலமுறை குறிப்பிட்டது போல், 2025க்குள் இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அனைத்து இட ஒதுக்கீடுகளையும் ரத்து செய்வது பாஜகவின் சதி. காங்கிரஸின் எண்ணம், மக்கள்தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டைத் தொடருவதும், அதிகரிப்பதுமாகும்.

இது குறித்து பட்டியலின, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். பாஜகவுக்கு வாக்களிப்பது என்பது உங்கள் சொந்த நலன்களுக்கு எதிராக வாக்களிக்கிறீர்கள் என்று அர்த்தம். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இட ஒதுக்கீட்டைத் தொடர்வது மட்டுமின்றி, ஓ.பி.சி.யினரின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைக் கேட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உரிய பங்கைப் பெற வேண்டும் என்று கூறியிருக்கிறார்” எனக் கூறினார். 

Next Story

“இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை பா.ஜ.க ரத்து செய்யும்” - மத்திய அமைச்சர் அமித்ஷா

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Union Minister Amit Shah says BJP will cancel reservation for Muslims

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

இதனையடுத்து, மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. 

அந்த வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது பேசிய அவர், “மஜ்லிஸுக்கு பயந்து காங்கிரசும், டி.ஆர்.எஸ் கட்சியும் தெலுங்கானா விடுதலை தினத்தைக் கொண்டாடுவதில்லை. மஜ்லிஸுக்கு பயப்படாததால் தெலுங்கானா விடுதலை தினத்தை கொண்டாடுவோம் எனப் பா.ஜ.க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் மற்றும் டி.ஆர்.எஸ் இஸ்லாமியர்களுக்கு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாஜக வழங்கும்.

காங்கிரஸும், டி.ஆர்.எஸ்.ஸும் ராமர் கோயில் கட்டுவதை ஒருபோதும் விரும்பவில்லை. 370வது சட்டப்பிரிவை ரத்து செய்துவிட்டு, காஷ்மீரை என்றென்றும் இந்தியாவுடன் ஒருங்கிணைத்தார் நரேந்திர மோடி. மத்திய பாஜக தலைமையிலான அரசு, 10 ஆண்டுகளில், நீண்ட காலமாக நாட்டில் நிலவி வந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது. சட்டப்பிரிவு 370ஐ நீக்கியதன் மூலம், காஷ்மீரை நாட்டோடு என்றென்றும் ஒருங்கிணைத்துவிட்டார் மோடி. ரகுநந்தன் ராவுக்கு அளிக்கப்படும் ஒவ்வொரு வாக்கும் மோடியை மீண்டும் பிரதமராக்க உதவும்” என்று கூறினார்.