Skip to main content

ஞானதேசிகன் மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி...

Published on 15/01/2021 | Edited on 15/01/2021

 

tamilnadu politicians mourns gnanadesigan

 

த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். வழக்கறிஞரான ஞானதேசிகன், மூப்பனாருடன் நெருக்கமாக இருந்ததால், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது அவருடன் சேர்ந்தே ஞானதேசிகன் செயல்பட்டார்.

 

த.மா.கா.வில் முக்கிய பதவிகளை வகித்துவந்தார். பின்னாளில் ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா., காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தபோது, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல்  இன்று காலமானார். இந்நிலையில், ஞானதேசிகன் மறைவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் மாநில காங்கிரஸின் துணை தலைவர்  திரு. ஞானதேசிகன் அவர்கள் இயற்கை எய்தினார் எனும் துயர செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அன்னாரின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்வதோடு குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "த.மா.கா துணை தலைவரும் கலைஞரின் நெருங்கிய நண்பருமான ஞானதேசிகன் அவர்கள் மறைவெய்தியதை அறிந்து மிகுந்த மனவேதனைக்குள்ளானேன். இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் என்றும் நீங்கா இடம் கொண்டவர். அவரை பிரிந்து வாடும் உற்றார் உறவினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்" எனத் தெரிவித்துள்ளார். 

 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முன்னாள் தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் முன்னாள் உறுப்பினருமான திரு பி.எஸ்.ஞானதேசிகன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இளமைப் பருவம் முதல் பெருந்தலைவர் காமராஜர் மீது பற்றுகொண்டு மாணவர் காங்கிரஸில் தம்மை இணைத்துக்கொண்டவர்.

 

அன்னை இந்திரா காந்தி, அமரர் ராஜீவ் காந்தி, அன்னை சோனியா காந்தி ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவர். மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று அவரது தலைமையில் தீவிரமான அரசியல் பணிகளை மேற்கொண்டவர். சிறந்த வழக்கறிஞர். பழகுவதற்கு இனிய பண்பாளர்.

 

தம் வாழ்நாள் முழுவதும் தேசியவாதியாக வாழ்ந்து மறைந்த திரு பி.எஸ்.ஞானதேசிகன் அவர்களது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு பி.எஸ்.ஞானதேசிகன் அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இயக்க நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.எஸ். ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

 

தமிழக அரசியலில் அனைத்துக் கட்சியினரிடமும் நட்பு பாராட்டிய, அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படும் தலைவர்களில் ஞானதேசிகனும் ஒருவர். அரசியலில் பதவிக்கு ஆசைப்படாதவர்.  கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பது எப்படி? என்பதற்கு சிறந்த முன்னுதாரனமாக திகழ்ந்தவர்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது பற்று கொண்டவர். அரசியலைக் கடந்து என் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஞானதேசிகன் விரைவில் உடல்நலம் தேறி திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது இறப்புச் செய்தியை எதிர்பார்க்கவில்லை.

 

அவரை  இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்தியில், "தமாகா'வின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரும் மேனாள் எம்.பி.யுமான திரு. ஞானதேசிகன் அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. 

 

மூப்பனார் அவர்களின் வழிகாட்டுதலில் எனது 'தேர்தல் வழக்கை' (1999) நடத்தியவர். 

 

அவருடைய மறைவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் குடும்பத்தினரை நேரில் சந்தித்த முதல்வர் பழனிசாமி..!

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

Chief Minister Palanisamy met the family of senior leader Gnanadesikan


த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 15ஆம் தேதி காலமானார். அவரது மறைவு குறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்திருந்தனர். அதேபோல் நேரில் சென்றும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

 

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று (18/01/2021) சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஞானதேசிகன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். 

 

அவர் மறைவின்போது எடப்பாடி பழனிசாமி, “ஞானதேசிகன் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியவர். பாராளுமன்றத்தில் அவரது கருத்துக்களை ஆழமாகவும் அறிவார்ந்தும் பேசக்கூடியவர். கொள்கை மாறுபாடு கொண்ட கட்சியினருடன் அன்பாக பழகக்கூடிய பண்பாளர்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

 

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் அங்கு இருந்தார். அவரையும் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கட்சி ரீதியாக அவரது இழப்பு மற்றும் தனிப்பட்ட நட்பு ரீதியாக அவரது இழப்புக்கு ஆறுதல் தெரிவித்தார். 

 

Next Story

"எனக்கு முதல் சம்பளம் கொடுத்தவர்" - ஞானதேசிகன் குறித்த நினைவுகளைப் பகிரும் வானதி சீனிவாசன்...

Published on 15/01/2021 | Edited on 16/01/2021

 

vanathi srinivasan shares memories about gnanadesigan

 

த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். வழக்கறிஞரான ஞானதேசிகன், மூப்பனாருடன் நெருக்கமாக இருந்ததால், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது அவருடன் சேர்ந்தே ஞானதேசிகன் செயல்பட்டார்.

 

த.மா.கா.வில் முக்கிய பதவிகளை வகித்துவந்தார். பின்னாளில் ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா., காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தபோது, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். இந்நிலையில், மறைந்த ஞானதேசிகன் உடனான சில நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன். அவரது பதிவு பின்வருமாறு...

 

vanathi srinivasan about gnanadesigan

 

"ஞானதேசிகன் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாகச் செயலாற்றியவர். தமிழகத்தில் வளமாக, அழுத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த தேசியத்தினுடைய ஒரு குரல் இன்று ஓய்ந்திருக்கிறது என நான் கருதுகிறேன். வழக்கறிஞர் தொழிலில் அவரது ஜூனியராக கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் நான் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வழக்கறிஞர் தொழிலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப்பெரிய எனக்கு ஆதரவாக இருந்த ஒருவரை நான் இழந்திருப்பதாக உணர்கிறேன். எந்த நேரத்திலும் சமரசமில்லாத ஒரு தேசிய குரலுக்குச் சொந்தக்காரர் அவர். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தும் கூட அவரது அலுவலகத்தில் ஜூனியர் வழக்கறிஞராக எனக்கு வாய்ப்பளித்தார். எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய ஒரு சக்தியாக அவர் இருந்தார். 

 

தமிழகத்தின் ஒரு அப்பழுக்கற்ற தேசிய நீரோட்டத்திலிருந்த ஒரு ஆளுமை மறைந்திருப்பது என்பது எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன். இது எனக்கு ஒரு தனிப்பட்ட இழப்பாக நான் கருதுகிறேன். என்னுடைய அப்பாவிடம் பேசி எனது திருமணத்தை நடத்தி வைப்பதில் மிக முக்கிய பங்காற்றியவர். ஆரம்ப காலகட்டத்தில் எனது வக்கீல் தொழிலில் சிறந்த பயிற்சியைக் கொடுத்ததோடு, இந்த தொழிலில் மக்களுக்கு உதவ எந்த அளவு தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதையும் எனக்குப் புரிய வைத்தவர் அவர். 

 

WhatsApp Image 2021-01-16.jpg

 

திருமணமாகி நான் டெல்லியில் வழக்கறிஞர் பணியிலிருந்தபோது, நான் மீண்டும் தமிழகம் திரும்ப முக்கியமான காரணமாக அவர் இருந்தார். தமிழகத்திலேயே நல்ல வாய்ப்புகள் உண்டு நீங்கள் ஏன் இங்கு திரும்பி வரக்கூடாது எனவும், என் அலுவலகத்திலேயே நீங்கள் பணியாற்றலாம் எனக்கூறி அவர் விடுத்த அழைப்பின் காரணமாகவுமே திரும்பவும் நாங்கள் தமிழகம் வந்தோம். அனைவரிடமும் நட்பு பாராட்டக் கூடியவர். கட்சி பேதமின்றி ஒரு சிறந்த மூத்த வழக்கறிஞருக்கு உதாரணமாக இருந்தவர். எனக்கு முதல் சம்பளத்தைக் கொடுத்த மூத்த வழக்கறிஞர் அவர். நான் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபாட்டுடன் இருந்து அதில் முன்னேறி வருவதற்கு மிக முக்கிய காரணம் அவர்".