கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.
இதனையடுத்து எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் அதை வேறுவகையில் திசை திருப்புவதில் எடப்பாடி அரசு கெட்டிக்காரத்தனமாகச் செயல்படுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர். அதற்கேற்றபடி செயல்படக்கூடியவர்களும் அதிமுகவில் இருப்பதாகக் கூறுகின்றனர். மூன்று நாளில் கரோனா ஒழிக்கப்படுமெனமுதல்வர் அறிவித்ததில் இருந்து நோய்த்தொற்று பல தரப்புக்கும் பரவ ஆரம்பித்திருக்கிறது. அது மக்களிடம் அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கிய நேரத்தில் தான், கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் முதற்கட்ட வெற்றியை எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அடைந்து இருக்கிறது என்று துணைவேந்தர் சுதாசேஷையன் திடீர் என்று அறிவிப்பு வெளியிட்டார். அடுத்த கட்ட ஆய்வை அமெரிக்காவோடு சேர்ந்து செய்ய வேண்டும் என்று விளக்கமாகக் கூறியிருந்தார். மருத்துவ வட்டாரத்தில் விசாரித்தால், பல்கலைக் கழகத்தில் அப்படியெதுவும் முழுமையான ஆராய்ச்சிகளுக்கு சான்ஸ் இல்லை என்றும், அதோடு அலோபதியையும் சித்தாவையும் கலந்து ஆய்வு என்று சுதாசேஷையன் தரப்பிலிருந்து கூறியதும் அரசைக் காப்பாற்ற நடந்த திசைதிருப்ப்பும்வேலைதான் என்று கூறிவருகின்றனர்.