Skip to main content

பணம் எப்போ வரும்? ரேஷன் கார்டுக்கு ரூபாய் 1000... யாருக்கு எப்போது கிடைக்கும்?

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

21 நாட்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தால் ஏழை-எளிய அன்றாட உழைப்பாளிகளின் வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மாதச் சம்பளக்காரர்களின் பாடும் பெரும் திண்டாட்டம்தான். தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்காக ஒரு குடும்ப அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் நிதியாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஊரடங்கு நேரத்தில் 'இந்தத் தொகை எப்படி வழங்கப்படும்?' என்கிற கேள்வி எழுந்தது.

முதல்வரின் அறிவிப்பு வெளியானதுமே, சமூக வலைதளங்களில் ரேசன் கடைகளில் கூட்டத்திற்கு நடுவே நின்று 1000 ரூபாய் பணம் பெற்றுக்கொள்வது போன்று படங்கள் வெளியாக, பொதுமக்கள் உடனே ரேசன் கடைகளுக்கு சென்று, 'பணம் எப்போ வரும்? பணம் எப்போ வரும்?' என்று கேட்க ஆரம்பித்தனர். இதுக்காகவே கூட்டம் திரள்வதால் பலரிடையே அச்சமும் நிலவியுள்ளது. ''ஏப்ரல் முதல் தேதிக்கு பிறகுதான் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்'' என்று பல ரேசன் கடைகளில் சொல்லி வந்தார்கள். ஏப்ரல் 2ஆம் தேதி வழங்கப்படும் என்று சில இடங்களில் சொல்லி வந்தார்கள்.

 

ration shop



இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, "கரோனா வைரஸினால் பொதுமக்கள் தனித்தனியே இடைவெளி விட்டு நின்று பணமும், பொருளும் வாங்கிச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு டோக்கன் கொடுத்து பொருளும் வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

மார்ச் மாத பொருட்களை ரேசன் கடைகளில் வாங்காமல் இருந்தால், பணம் கொடுத்து தற்போது வாங்கிக்கொள்ளலாம்.

அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் பெற விருப்பம் இல்லாதவர்கள் சிவில்சப்ளை இணையதளத்தில் அல்லது செயலியில் வாங்க விரும்பவில்லை என்று பதிவு செய்யலாம்.

அனைத்து நியாய விலைக் கடை பணியாளர்களும் பொதுமக்களுக்கு நிதியுதவியை முறையாக விநியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்கள்.



இந்நிலையில், கூட்டுறவுத்துறை 26.3.2020 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ரேசன் கார்டுகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் அறிவிப்பு ஆறுதலைத் தருகிறது. அவர் கூறியுள்ள தகவலில், ''ஒவ்வொரு நியாயவிலைக் கடை ஊழியர் மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டுக்கே ஆவணங்களுடன் நேரடியாக சென்று, ஆயிரம் ரூபாய் பணத்தினை தருவார்கள். அதனை அவர்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். இதனை வழங்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பணம் பெற்றுக்கொண்டதும் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.

அதேபோல் நியாய விலைக்கடையில் அனைவருக்கும் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை எப்போது வேண்டுமானாலும் சென்று வாங்கலாம், கூட்டமாக இருக்கும்போது கடைக்கு செல்லாமல் இருக்கலாம். அரசு பின்பற்றக் கூறிய இடைவெளியில் நிற்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, இந்த ஆயிரம் ரூபாய் போதாது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வெளியிட்டு, அதற்கு நிவாரணமாக பொதுமக்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த, அடுத்த சில மணி நேரத்தில் பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறார். 31ஆம் தேதி வரையிலான வேலை நிறுத்தத்துக்கே, ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வது? என்று வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த எளிய மக்கள் புலம்பித் தவித்துக் கொண்டிருக்கையில், 21 நாட்கள் வேலையில்லாமல் முடங்கிக்கிடந்தால் அதுக்கு ஆயிரம் ரூபாய் எல்லாம் எம்மாத்திரம்? இதில் உள்ள சிக்கலை அரசு உணர வேண்டும். ஊரடங்கினால் எளிய மக்களின் பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்துகொண்டு, அதற்கேற்ப நிதியுதவியை உயர்த்தி தர வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

தற்போதைய நிலையில், முதல் கட்டமாக 1000 ரூபாயை ஒவ்வொரு ரேஷன் கடையிலும் நூறு, நூறு பேருக்காகத் தரும்போது, பாதிப்படைந்தவர்களில் ஒரு சிலருக்கு முன்கூட்டியும், ஒருசிலருக்கு கடைசியாகவும் கிடைக்கக் கூடிய நிலை உள்ளது.

ஏப்ரல் 2ல் தொடங்கி 15 வரையிலான பண விநியோகத்தில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் என்பது தெரியாத நிலையில், மக்கள் பொறுத்திருந்து தங்களுக்கான தொகையைப் பெறவேண்டிய சூழலில் இருக்கிறார்கள். இதற்கிடையே, கேஸ் மானியத்தை விட்டுக்கொடுப்பவர்கள் தாங்களாக முன்வந்து அறிவிக்கச் சொன்ன மத்திய அரசு போல, மாநில அரசும் தற்போதைய நிதி நெருக்கடி நிலையில், ரேஷன் கார்டுக்கான 1000 ரூபாயை விட்டுக் கொடுக்க நினைப்பவர்கள் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.