Skip to main content

“நானும் ரவுடி தான் என்பதுபோல சீமான்...” - கே.எஸ். அழகிரி

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

 Tamilnadu congress president K.S.Alagiri says  Seaman is a comedian

 

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ‘ரக்‌ஷா பந்தன்,  ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ. 200 மானியம் வழங்குவதற்கும், நாடு முழுவதும் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை ரூ. 200 குறைப்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது’ என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். இந்த எரிவாயு சிலிண்டர் விலை குறைப்புக்கு மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில், இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென்று குறைத்துள்ளது என்பது வேடிக்கையாக இருக்கிறது. ‘யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே’ என்பது போல நாடாளுமன்றத் தேர்தல் வருவதையொட்டி எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. அதையும், பிரதமர் மோடி ரக்‌ஷ பந்தனுக்கு பரிசாக அளித்து இருப்பதாக கூறுகிறார்கள். இதை நான் மக்கள் கைகளில் போட்ட விலங்கை தளர்த்தி இருப்பதாகவே பார்க்கிறேன்.

 

பிரதமர் மோடி, இந்திய மக்களைப் பற்றி என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. எப்போதுமே விலை நிர்ணயம் என்பது மூலப்பொருள் என்ன விலை? அதை உபயோகப்படுத்தக்கூடிய பொருளாக மாற்றுவதற்கான செலவு, நிர்வாகச் செலவு ஆகியவற்றை மதிப்பிட்டுத் தான் நிர்ணயிக்கப்படுகிறது. 

 

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலர் என விற்றது. அன்றைக்கு பெட்ரோல் விலை ரூ.70, டீசல் விலை ரூ.60, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 400க்கு வழங்கினார். ஆனால், இன்று உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை வெறும் 70 டாலராக விற்கப்படுகிறது. எனவே, சர்வதேச சந்தையின் தற்போதைய நிலவரப்படி சிலிண்டரின் விலையை ரூ. 200க்கு தான் வழங்க வேண்டும். ரூ.200க்கு விற்க வேண்டிய சிலிண்டர் விலையை ரூ.1200க்கு விற்றுவிட்டு தற்போது ரூ. 200 குறைத்து இருப்பதை விட ஏமாற்று வேலை வேறு இருக்க முடியாது. 

 

காங்கிரஸ் ஆட்சியில், நீட் தேர்வுக்கான வரைவு திட்டத்தை வெளியிட்ட போதே ராகுல் காந்தி அதற்கு விளக்கம் அளித்து இருந்தார். விரும்புகிற மாநிலங்கள் நீட் தேர்வை நடத்திக் கொள்ளலாம், விரும்பாத மாநிலங்கள் நீட் தேர்வை விட்டு விடலாம் என்று ஏற்கனவே விளக்கம் அளித்து இருந்தார். தமிழகத்தில் ஏன் நீட் தேர்வுக்கான விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்கிறோம் என்றால், இங்கு 90 சதவீத மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள். அரசுப் பள்ளியில் மாநில பாடத் திட்டத்தைக் கொண்டு மாணவர்கள் படிப்பதால் தான் அதற்கு விலக்கு கேட்கிறோம். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வேன் என்று வாக்குறுதி கொடுத்தது உண்மைதான். அதற்கு காரணம், சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்ற அரசியல் சாசனம் மீதான நம்பிக்கையில் தான். 

 

காங்கிரஸ் கட்சியை வெளியேற்றினால் திமுகவிற்கு ஆதரவு அளிக்கத் தயாராக இருக்கிறேன் என்று சீமான் கூறியிருப்பதற்கு ஒரே வரியில் தான் பதில் சொல்ல விரும்புகிறேன். அதாவது, சீமானை ஒரு நகைச்சுவை நடிகராகத் தான் பார்க்கிறேன். ஒரு படத்தில் வடிவேலு, ‘நானும் ரவுடி தான்; நானும் ரவுடிதான்’ என்று கூறுவார். அதுபோல் தான் சீமானுடைய கருத்தும் உள்ளது.  அவரைப் பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை” என்று தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.