Tamilisai soundararajan criticizes tamilnadu government for marina air show

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில், 10 லட்சத்திற்கு மேலானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, மக்கள் வெளியேற முடியாமல் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மக்கள் பலரும் அவதிப்பட்டனர். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த 5 பேர், உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும், சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 5 பேரும், வெப்பத்தின் தாக்கம் காரணமாக இறந்துள்ளதாகவும், இதில் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தெலுங்கானா முன்னாள் ஆளுநரும், பா.ஜ.க மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “குளிரூட்டும் வசதியுடன் முன் வரிசையில் அமர்ந்த அதிகார வர்க்கம். நிகழ்ச்சி முன்னேற்பாடு குளறுபடியால் தவித்த சாமானிய மக்களை தமிழக அரசு காக்க தவறியது ஏன்? நடிகர் விஜய் கட்சி மாநாட்டிற்கு 21 கேள்விகள், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், கோயம்பேட்டில் நடக்கவிருந்தபா.ஜ.கவின் மாநாடு, அதே போல் ஆண்டாண்டு நடக்கும்ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கு எத்தனை பேர் வருவார்கள், எங்கே கார் நிறுத்தம், எங்கே பேருந்து நிறுத்தம், எங்கே உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, எங்கே மருத்துவ மையங்கள், ஆம்புலன்ஸ் வசதிகள், இருசக்கர ஆம்புலன்ஸ் வசதி, எத்தனை மருத்துவர்கள், எத்தனை செவிலியர்கள், எத்தனை உதவியாளர்கள் என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கும் தமிழக அரசு.

நம் இந்திய நாட்டின் விமானப்படை நடத்தும் நிகழ்ச்சிக்கு உரிய முன்னேற்பாடுகளை செய்யாதது ஏன்? கார் ரேசுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை முந்தைய நாளே முன் நின்று கவனித்த இன்றைய துணை முதலமைச்சர், தேசத்தின் பெருமையை பறைசாற்றும் விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த மக்களை காக்க தவறிய காரணம் என்ன? மாநில உரிமை பேசும் திராவிட மாடல் அரசு மக்கள் உயிரை காக்க தவறியது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.