Skip to main content

மீளட்டும் தமிழகம்!  ஆளட்டும் சமூகநீதி ! - பேராசிரியர் ஜவாஹிருல்லா 

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

Tamil Nadu is back! Ruled social justice!  Prof. Jawahirullah

 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு திமுக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக கூட்டணியில் அங்கம் வகுக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் தொகுதியின் வேட்பாளருமான  பேராசிரியர் ஜவாஹிருல்லா, “தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு கடந்த ஏப்ரல் 6, 2021 அன்று நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

இதை வெறும் வாக்களிப்பு என்று மட்டும் கருதாமல், தமிழக மண்ணின் தன்மானத்தையும், தனித்தன்மையையும் பாதுகாத்திட தரப்பட்ட மாபெரும் பங்களிப்பு என்றும் கருதி நன்றி நவில்கிறேன். தமிழ்நாடு முழுவதும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அல்லும் பகலும் அயராமல் சுற்றிச் சுழன்று நெஞ்சுறுதியுடன் களப்பணியாற்றிய மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டர்களுக்கும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உறவுகளுக்கும் எனது உள்ளம் கனிந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

 

ம.ம.க. போட்டியிட்ட பாபநாசம் மற்றும் மணப்பாறை தொகுதிகளில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் களப்பணியாற்றிய திமுகவின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளுடைய நிர்வாகிகளின் கண் துஞ்சாக் களப்பணிகளுக்கும் கனிவான நன்றி. பாபநாசம் தொகுதியில் போட்டியிட்ட நான், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தேர்தல் பரப்புரையில் ஒருவார காலம் மருத்துவமனையில் இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த இக்கட்டான சூழலில், நான் நேரடியாகப் பரப்புரையில் இல்லாத சூழலில், தொகுதி முழுவதும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத அளவிற்கு களப்பணியாற்றிய திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்களுக்கும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை ஈடாகாது. அவர்களது உழைப்பிற்கு என்றென்றும் நான் கடன்பட்டுள்ளேன். கரோனா அச்சுறுத்தலையும் மீறி வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு மீண்டும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி. மீளட்டும் தமிழகம். இனி ஆளட்டும் சமூக நீதி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோடியின் வெறுப்பு பிரச்சாரம்; ஆக்சன் எடுக்குமா தேர்தல் ஆணையம்?- ஜவாஹிருல்லா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Jawahirullah said Election Commission should take action against Modi hate campaign

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் அனல் கக்கும் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் வெறுப்பு அரசியலை உமிழ்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ, "ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச்செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது என்றெல்லாம் கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித்  தலைகுனிய வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளைப் பேச மோடிக்கு ஏதுமில்லை.  

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்ட ரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார். குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அவரது உள்ளத்தில் உறைந்திருந்த  சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் பிரதமரான பிறகும் சற்றும் கரையவில்லை என்பதை அவரது பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை.

நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு, அப்பட்டமாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட்சியின் அருவருப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது. பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுவுநிலையை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இதை இந்தியத்தேர்தல் ஆணையம் மௌனமாகக் கடந்து போனால், அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் கருத்திற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திடவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

Next Story

“நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்தைப் புதைக்க நினைக்கிறார்கள்” - சு. வெங்கடேசன் எம்.பி.

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
Su Venkatesan MP says They are afraid of the present and want to bury the past

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், “கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் செயல்பாடுகளால் நாடு அடைந்துள்ள வளர்ச்சி குறித்து நடப்பு கூட்டத் தொடரிலேயே வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும், மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை நேற்று தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், வெள்ளை அறிக்கை மீதான விவாதம் இன்று (09-02-24) மக்களவையில் நடைபெற்றது. 

வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தின் போது உரையாற்றிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், “சில மனிதர்கள் நிகழ்காலத்திற்கு அஞ்சி கடந்த காலத்திலேயே வாழ்வார்கள். அதுபோல் சில கட்சிகளும் தேர்தல் வந்துவிட்டால் வேலையின்மை, வறுமையை பற்றி நாங்கள் பேசினால், பா.ஜ.க பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படையெடுப்பை பற்றி பேசுகிறார்கள்.

நாங்கள் பணவீக்கத்தைப் பற்றிப் பேசினால், நீங்கள் பாபரைப் பற்றிப் பேசுகிறீர்கள். நாங்கள் கார்ப்பரேட்டுகளைப் பற்றிப் பேசினால், நீங்கள் கஜினி முகமதைப் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள், நிகழ்காலத்திற்கு அஞ்சி நாட்டைக் கடந்த காலத்திற்குள் புதைக்க நினைக்கிறீர்கள். கடந்த காலத்தை கழித்துவிட்டால் உங்களிடம் எதிர்காலத்தை சந்திக்கிற எந்தவொரு கருவியும் இல்லை” என்று கூறினார்.