Skip to main content

தமிழ்நாடு தான் காரணம்; நாடாளுமன்றத்தில் குறை சொன்ன அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Tamil Nadu is the reason; CM Stalin's letter to Minister Nitin Gadkari who complained in Parliament

 

சென்னையில் சாலை அமைப்பது குறித்து தயாநிதி மாறன் எம்.பி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறிய பதிலின் காரணமாக தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

 

சென்னையில் இருந்து இராணிப்பேட்டை (NH-4) வரை இருக்கும் சாலையின் நிலையை மேம்படுத்திட வேண்டுமென தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “இந்த சாலை தொடர்பாக ஏற்கெனவே நான் பல முறை எம்.பி.யிடம் விளக்கம் அளித்துள்ளேன். அத்துடன் அவரது மாநில முதல்வருக்கும் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். சாலைப்பணிகளை இந்த ஆண்டு டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பணிகளை முடித்தால் சென்னை முதல் பெங்களூரு செல்ல வெறும் 2 மணி நேரம் மட்டுமே செலவாகும். 

 

தமிழ்நாட்டில் அமையும் நெடுஞ்சாலையின் முக்கியத்துவமும் நான் அறிவேன். இதை விரைந்து முடிக்க நாங்கள் நூறு சதவிகிதம் தயாராக உள்ளோம். இதற்காக உங்கள் ஒத்துழைப்பு கிடைத்தால் எங்களுக்கு பேருதவியாக இருக்கும். தமிழகத்தின் அனைத்து எம்.பி.க்களும் தங்கள் தொகுதிகளில் அமையும் விரைவு தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டும்” எனக் கூறினார்.

 

இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலஜாபேட்டை வரையிலான சாலை, சென்னை நகரம் மற்றும் அதன் துறைமுகங்களில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், இராணிப்பேட்டை, ஒசூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய இணைப்பை வழங்குகிறது.

 

இந்தச் சாலையின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளதன் காரணமாக சமீபத்தில் ஒரு சில மாவட்டங்களுக்கு உதான் இரயிலில் செல்ல நேரிட்டது. இந்த சாலை தொடர்பான எங்களது நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கை முக்கியமானதாக இருந்தபோதிலும், நாடாளுமன்றத்தில் ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அளித்துள்ள பொதுவான மற்றும் உறுதியற்ற பதிலால் எங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட விரைவுச் சாலைத் திட்டத்திற்குச் சாத்தியமான எல்லா உதவிகளையும் தமிழ்நாடு அரசு வழங்குவதன் மூலம் அந்தத் திட்டம் புத்துயிர் பெற்றுள்ளது. கடந்த காலத்தில் வழங்கப்படாத பல்வேறு சலுகைகள் மற்ற பெரிய NHAI திட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசு இத்தகைய நேர்மையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில், மாநில அரசு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் ஒத்துழைக்கவில்லை என்பது போன்ற தோற்றம் ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அளித்த பதிலால் ஏற்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. அது உண்மையல்ல என்றும் மாநில மற்றும் ஒன்றிய அரசுகளால் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு இடையே பாரபட்சம் காட்டாமல் அனைத்து முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் விரைவுபடுத்த தங்களால் முடிந்த அனைத்தையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

 

நாடாளுமன்றத்தில் எம்.பி தயாநிதி மாறன் குறிப்பிட்ட கோரிக்கையைப் பரிசீலிக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வழங்கிட வேண்டும். தேசிய நெடுஞ்சாலை-4-ல் ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிப்பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. ஒப்பந்ததாரர்களுக்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப் பிரச்சனையால் பணிகள் கிடப்பில் போடப்பட்டு தற்போதுள்ள சாலையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மோசமான சாலை பராமரிப்பு காரணமாக சுங்கச்சாவடி கட்டணம் 50 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. சாலைகளின் மோசமான நிலைமை, பயனர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் ஆகியவை சிறப்பாகச் செயல்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்