Skip to main content

ஆன்லைன் வகுப்புகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும்! -ராமதாஸ் 

Published on 03/09/2020 | Edited on 03/09/2020
ramadoss

 

 

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்காக குழந்தைகள் மீது ஆன்லைன் வகுப்புகளை திணிப்பது முட்டாள்தனமானது; மனித உரிமை மீறல் ஆகும். உயிர்களை பறிக்கிறது; ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது என்பதால் ஆன்லைன் வகுப்புகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களின்  அறிவை வளர்ப்பதற்கு மாறாக, மன அழுத்தத்தையும், தற்கொலை எண்ணத்தையும் வளர்த்து வருகின்றன என்பதை கடந்த சில நாட்களில் நடந்த நிகழ்வுகள் உறுதி செய்துள்ளன. சுகமாக இருக்க வேண்டிய கல்வியை சுமையாக மாற்றி வரும் ஆன்லைன் வகுப்புகள் ஊக்குவிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

 

கரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்று கூறி, தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு ஆன்லைன்  வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் அரசு பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு  இத்தகைய வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. அவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வித் தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் பாடங்கள் ஒரு வழி உரையாடல் என்பதாலும், அதை பின்பற்றுவதற்கு கட்டாயமில்லை என்பதாலும் அரசு பள்ளி மாணவர்கள் விவகாரத்தில் இதுவரை எதிர்மறைத் தாக்கங்கள் எதுவும் ஏற்படவில்லை.

 

ஆனால், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரில் பெரும்பான்மையினரால் ஆன்லைன் வகுப்புகளை எதிர்கொள்வது என்பது பொருளாதாரம் சார்ந்தும், புரிதல் சார்ந்தும் பெரும் போராட்டமாக மாறியிருக்கிறது. ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதற்கு குறைந்தபட்சம் தரமான செல்பேசியில் தொடங்கி அதிகபட்சம் மடி கணிணி வரை தேவைப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 2 அல்லது 3 குழந்தைகள் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் இத்தகைய கருவிகள் தேவை. தனியார் பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை படிக்க வைக்க கடன் வாங்கி கட்டணம் செலுத்தும் ஏழை பெற்றோரால் புதிய செல்பேசியோ, மடிகணிணியோ வாங்கித் தர முடியாத நிலையில், அவர்களால் எப்படி கல்வி கற்க முடியும்? ஆன்லைன் கல்வி முறை கல்வி வழங்குவதற்கு பதிலாக மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கிறது.

 

கல்வி வழங்கப்படுவதன் நோக்கமே ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமநிலை சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால், அந்த கல்வியைக் கற்பிப்பதற்கான முறையே ஏற்றத்தாழ்வை  உருவாக்கும் என்றால், அந்த முறையை குப்பையில் வீசி எறிவது தான் சமூகநீதியாகவும், சமநீதியாகவும்  இருக்கும். இவற்றையெல்லாம் கடந்து ஆன்லைன் வகுப்புகள் முறையாக கற்பித்தல் முறையே அல்ல. வகுப்புகளில் பாடங்கள் நடத்தப்படும்போது, மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் ஐயங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெற முடியும். ஆன்லைன் வகுப்புகளில் பெரும்பாலான நேரங்களில் மாணவர்கள் ஐயம் கேட்க ஆசிரியர்கள் அனுமதிப்பதில்லை. சில ஆசிரியர்கள் யு&ட்யூப் இணையத்தில் உள்ள கற்பித்தல் காணொலிகளை ஒளிபரப்பி அத்துடன் தங்கள் கடமையை முடித்து கொள்கின்றனர். இத்தகைய ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதும் ஒன்று தான்.... நடத்தப்படாமல் இருப்பதும் ஒன்று தான்.

 

ஆன்லைன் வகுப்புகளுக்கான வசதிகள் இல்லாததாலும், பாடங்கள் புரியாததாலும் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மேற்கு நன்னாவரத்தில் ஒரே செல்பேசியை ஆன்லைன் வகுப்புகளுக்காக 3 சகோதரிகள் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்த நிலையில், அதனால் ஏற்பட்ட மன வருத்தம் காரணமாக நித்யஸ்ரீ என்ற மாணவி நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆண்டிப்பட்டியை அடுத்த கரட்டுப்பட்டியைச் சேர்ந்த  விக்கிரபாண்டி என்ற 11-ஆம் வகுப்பு மாணவர், தமக்கு ஆன்லைன் வகுப்பு புரியவில்லை என்று தமது தந்தையிடம் கூறியுள்ளார். அதை ஏற்காத தந்தை திட்டியதால் விக்கிரபாண்டி நேற்று தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் சிறுதொண்டமாதேவி கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் விக்னேஷிடம் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க செல்பேசி இல்லாததற்காக பள்ளி நிர்வாகம் திட்டியதால்  அந்த மாணவன் சில வாரங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். கோவை பாப்பநாயக்கன் பாளையம் 10-ஆம் வகுப்பு மாணவி கனிஷ்கா, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் ரித்திகா என ஆன்லைன் வகுப்புகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

 

ஆன்லைன் வகுப்புகள் ஒருபுறம் என்றால், ஆன்லைன் வழியில் அளிக்கப்படும் அளவுக்கு அதிகமான வீட்டுப்பாடங்கள் மாணவர்களின் விளையாடும் உரிமையை பறிக்கின்றன. மொத்தத்தில் ஆன்லைன் வகுப்புகள் கல்வி என்ற நிலையை தாண்டி பெரும் தொல்லையாகவும், கொடுமையாகவும் மாறியுள்ளன. இவற்றைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 7&ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதை உரியவர்கள் செவி மடுக்கத் தவறியதன் விளைவாகத் தான் இத்தனை மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

 

குறிப்பிட்ட வகுப்புகளுக்கு மேல், குறிப்பிட்ட நேரம் மட்டும் தான் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டாலும் கூட, எல்.கே.ஜி. வகுப்புகளுக்கு கூட 4 மணி நேரம் வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டும்; வசூலித்த கட்டணத்திற்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே கட்டாயமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் மருத்துவரீதியாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். ஆன்லைன் வகுப்புகளின் போது செல்பேசியை குழந்தைகள் உற்று நோக்கும் போது, அதிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகள் கண்களை பாதிக்கும். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்காக குழந்தைகள் மீது ஆன்லைன் வகுப்புகளை திணிப்பது முட்டாள்தனமானது; மனித உரிமை மீறல் ஆகும்.

 

ஆன்லைன் வகுப்புகள் எனப்படுபவை தொழில்நுட்ப வளர்ச்சியின் வெளிப்பாடு; அவற்றை பயன்படுத்தக்கூடாது என்பது பிற்போக்குத்தனம் இல்லையா? என்று சிலர் வினா எழுப்பலாம். கல்வியில் ஏற்றத்தாழ்வுகளையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தும் எந்த முறையும் தேவையற்றது தான். தவிர்க்க முடியாத பட்சத்தில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்கலாம். மற்ற வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளை தமிழக அரசு தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக பாடத்திட்டக் குறைப்பு தொடர்பாக வல்லுனர்  குழு கடந்த ஜூன் 10&ஆம் தேதி தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்து பாடத்திட்டத்தை  நடப்பாண்டிற்கு மட்டும் 50% வரை குறைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் இதை கவனத்தில்  கொண்டு, மாணவர்களை பாதிக்கும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிப்பார் என நம்புகிறேன்” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.