
சேலம் மாவட்டம் மேட்டூருக்கு கடந்த 12ஆம் தேதி வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 92 ஆவது ஆண்டாக மேட்டூர் அணையில் பாசனத்திற்கு நீர் திறந்து வைத்தார். பின்னர் சேலத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், மதுரைக்கு வந்து உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, “அமித்ஷா அவருடைய பேச்சில் தன்னுடைய ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்து இருக்கிறார். ஒன்றிய அரசு அறிவிக்கின்ற திட்டங்களை மடை மாற்றி மக்களுக்கான நன்மைகளை கிடைக்க விடாமல் செய்கிறது திமுக அரசு என பேசி இருக்கிறார். ஆனால் உண்மை என்ன? குடிநீர் திட்டமாக இருந்தாலும் சரி, வீடு கட்டும் திட்டமாக இருந்தாலும் சரி ஒன்றிய அரசு ஒதுக்கக்கூடிய பணத்தை வைத்து செயல்படுத்த முடியாது என்று மாநில அரசு தான் கூடுதல் பணத்தை கொடுக்கிறது. பிரதமருடைய பெயரை வைத்திருக்கக் கூடிய திட்டங்களுக்கு 50 விழுக்காட்டுக்கு மேல் மாநில அரசு நிதி ஒதுக்கி செயல்படுத்துகிறோம். நீங்கள் ‘படையப்பா’ சினிமா பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு காட்சி வரும். ‘மாப்பிள்ளை இவர்தான் ஆனால் அவர் போட்டிருக்கக் கூடிய சட்டை என்னுடையது’ என டயலாக் வரும். இது போலத்தான் ஒன்றிய அரசு போடும் திட்டங்களுக்கும் நாம் நிதி கொடுத்துக் கொண்டு வருகிறோம்” என்று பேசியிருந்தார். படையப்பா பட வசனத்தை குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தது பேசுபொருளானது.
இந்த நிலையில், மீண்டும் படையப்பா படக் காமெடியை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய பா.ஜ.க அரசை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!
படையப்பா படக் ‘காமெடி’ போல ‘மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது’ எனச் சேலம் அரசு விழாவில் பேசியிருந்தேன். பேசினேன் என்பதைவிட பேசவேண்டிய நிலைக்கு உள்துறை அமைச்சரின் அடிப்படையற்ற குற்றச்சாட்டால் தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும். அது நாளிதழில் செய்தியாகி, தரவுகளோடு விவரிக்கப்பட்டுள்ளது. இனியாவது, கண்ணாடி வீட்டில் இருந்துகொண்டு கல்லெறியும் பழக்கத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும் ஸ்டிக்கரில் பிரதமரின் முகத்தையும் தாங்கிச் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கெல்லாம் அவர்களைக் காட்டிலும் அதிகமாகப் படியளப்பது மாநில அரசுதான்!
படையப்பா படக்… https://t.co/m9PbFg4Jhh pic.twitter.com/cFz2dQOU0s— M.K.Stalin (@mkstalin) June 14, 2025