Skip to main content

“Golden Hours” களை வீணடிக்கிறோமோ... ஸ்டாலின் 

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

கரோனா வைரஸ் “நோயை எதிர்கொள்ள” நமக்கு கிடைக்கும் “Golden Hours” களை வீணடிக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
 

தமிழக சட்டப்பேரவைத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா வைரஸ் நோய் காஞ்சிபுரத்தில் ஒருவருக்கு இருப்பதாக முதன் முதலில் 9.3.2020 அன்று கண்டுபிடிக்கப்பட்டு- இன்றுடன் 9 பேருக்கு கொரோனா நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் திரு விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 12 நாளில் 9 பேருக்கு கொரோனா நோய் என்பதும், 8950 பேருக்கு மேல் தனிமைப்படுத்துப்பட்டு- கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்ற செய்தியும் “நோயை எதிர்கொள்ள” நமக்கு கிடைக்கும் “Golden Hours” களை வீணடிக்கிறோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
 

மத்திய அரசு பள்ளி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு அலுவலகங்களில் பி மற்றும் சி ஊழியர்கள் 50 சதவீதம் பணிக்கு வந்தால் போதும் என்றும்- இந்த நடைமுறை ஏப்ரல் 4 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு- நேற்றைய தினம் தமிழ்நாட்டிலும் அது நீட்டிக்கப்பட்டு இன்று அதிகாலை 5 மணி வரை சுய ஊரடங்கு அமலில் இருந்துள்ளது.


 

dmk



நேற்றைய தினம் மாநில தலைமைச் செயலாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சரவை செயலாளர்  “கொரோனா நோய் பாதிப்பிற்குள்ளானவர்கள் ரிப்போர்ட் ஆன 75 மாவட்டங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, “அந்த மாவட்டங்களில் அத்தியாவசியத் தேவைகளை மட்டும் அனுமதிக்குமாறு” மாநில அரசுக்கு  அறிவுறுத்தியுள்ளார்.

 

“தனிமைப்படுத்துவது” மட்டுமே கொரோனா நோய் தடுப்பிற்கு இன்றியமையாத ஒரே மருந்து என்று உலகம் முழுவதும் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நிலையில்- தற்போது நாமே சட்டமன்றத்தில் கூட்டமாக அமர்ந்து விவாதித்துக் கொண்டிருப்பது மக்களின் பாதுகாப்பிற்கு உகந்ததாகத் தெரியவில்லை. நோய் வரும் முன்பே “தனிமைப்படுத்திக்” கொள்ளாத “இத்தாலி” நாட்டின் பாதிப்பையும், முன்கூட்டியே “நோய் குறித்து”, "நோய் அறிகுறி" குறித்து தகவல் கிடைத்தும் தயாராகாமல் அலட்சியம் செய்த சீனாவின் பாதிப்பையும் நமது மாநில அரசு உணரத் தவறியிருப்பது வருத்தமளிக்கிறது. 

பிரதான எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் “தனிமைப்படுத்திக் கொள்வோம்” என்று அரசு அறிவித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு எதிராகவே கூட்டத் தொடர் நடைபெறுகிறது. ஆகவே மக்களின் பாதுகாப்பு கருதியும், சட்டமன்ற உறுப்பினர்கள் அச்சத்தில் வாழும் மக்களின் பக்கத்தில் தொகுதியில் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும், தற்போது நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களை இன்று (23.3.2020) முதல் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
 

“முன்னெச்சரிக்கை நடவடிக்கை” மற்றும் “வரும் முன் காப்போம் நடவடிக்கை” ஆகியவற்றில் அரசின் கவனத்தை மேலும் ஈர்க்க தி.மு.க.வின் இந்தச் சட்டமன்ற “கூட்டத் தொடர் புறக்கணிப்பு” உதவிடும் என்று நம்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்