Skip to main content

ஸ்விகி ஊழியர்கள் குடும்பப்பசியை போக்க வேண்டும்... தொழிலாளர் நலத்துறை சிக்கலை தீர்க்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
Swiggy

 

 

ஸ்விகி உணவு வினியோக ஊழியர்களின் ஊதியக்குறைப்பு சிக்கலை தீர்க்க வேண்டும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை தொழிலாளர் நலத்துறை மேற்கொள்ள வேண்டும். ஸ்விகி ஊழியர்கள் குடும்பப்பசியை போக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னையில் ஊதியக் குறைப்பு, ஊக்கத்தொகை குறைப்பு ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தி, ஸ்விகி உணவு விநியோகப் பணியாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஸ்விகி நிறுவனம் இதுவரை முன்வராதது கண்டிக்கத்தக்கது.

 

சென்னை உள்ளிட்ட நகரங்களில் மனிதர்களின் வாழ்க்கை முறையிலும், பணி முறையிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, வீடுகளில் சமைப்பதற்கு பதிலாக உணவகங்களில் ஆன்லைன் முறையில் உணவுகளை வாங்கி உண்ணும் வழக்கம் அதிகரித்து வருகிறது. ஆன்லைன் முறையில் ஆர்டர் செய்யும் உணவுகளை உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு கொண்டுச் சென்று கொடுக்கும் பணியில் ஸ்விகி, சொமட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் சார்பில் வீடுகளுக்கு  உணவுகளை கொண்டு சென்று வழங்கும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் 60 விழுக்காடு குறைக்கப்பட்டிருப்பதாகக்கூறி, அந்தப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சென்னையில் 4 கி.மீ சுற்றளவில் உள்ள இடங்களுக்கு உணவு கொண்டு சென்று வழங்குவதற்காக  வழங்கப்பட்டு வந்த ஊதியம் முதலில் 40 ரூபாயிலிருந்து, 35 ரூபாயாகவும், இப்போது 15 ரூபாயாகவும் குறைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர நீண்ட தொலைவுக்கு சென்று உணவு வழங்குவதற்கான ஊக்கத்தொகை உள்ளிட்ட 20 வகையான ஊக்கத்தொகைகளும் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கின்றன. இது உணவு விநியோக பணியாளர்களின் வாழ்வாதாரத்தை பாதித்திருப்பதால் அவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

 

வழக்கமாக ஒரு பணியாளர் ஒரு நாளைக்கு 20 முதல் 25 இடங்களுக்கு சென்று உணவு வழங்க முடியும். ஒரு முறை உணவு வழங்க ரூ.40 ஊதியமாக வழங்கப்பட்டால், அவர் அதிகபட்சமாக தினமும்  ரூ.1,000 வருவாய் ஈட்டுவார். அதில் உணவு மற்றும் எரிபொருள் செலவு போக ஒரு நாளைக்கு ரூ.750 வரை கிடைக்கும். அது அவர்களின் குடும்ப செலவுக்கு போதுமானதாக இருக்கும். அத்துடன் கூடுதலாக கிடைக்கும் ஊக்கத்தொகை அவர்களின் பிற தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவியாக இருக்கும்.

 

ஆனால், இப்போது ஒருமுறை உணவு வழங்க ரூ.15 மட்டுமே வழங்கப்படுவதாலும், தினமும் 20 முறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவதாலும் அவர்களுக்கு ரூ.300 மட்டும் தான் வருமானமாக கிடைக்கிறது. அதிலும் உணவு மற்றும் எரிபொருள் செலவு ரூ.200 போக ரூ.100 கூட நிகர வருமானமாக கிடைப்பதில்லை. இதனால் சென்னை மக்களுக்கு உணவு விநியோகிக்கும் ஸ்விகி பணியாளர்களின் குடும்பத்தினருக்கு உணவு கிடைப்பதில்லை. ஊதியக் குறைப்பை கண்டித்து ஸ்விக்கி ஊழியர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு  ஸ்விக்கி நிறுவனம் முன்வரவில்லை. அதேபோல், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும் இந்த சிக்கலில் தலையிட்டு, இரு தரப்பையும் அழைத்துப் பேசி தீர்வு காணவில்லை. இது கடமை தவறிய செயலாகும்.

 

ஸ்விகி நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை குறைத்தது எந்த வகையிலும் நியாயமில்லை. ஸ்விகி உள்ளிட்ட ஆன்லைன் நிறுவனங்களின் மூலம் உணவு ஆர்டர் செய்யும்போது, உண்மையான விற்பனை விலையை விட 20 முதல் 30% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, உணவு வழங்குவதற்கான விநியோக கட்டணமாக ரூ.50 முதல் ரூ.125 வரை வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு கொள்ளை லாபம் பார்க்கும் நிறுவனங்கள் தங்களின் தொழிலாளர்களுக்கு ரூ.40 ஊதியம் வழங்க மறுப்பது நியாயமல்ல. உழைக்கும் தொழிலாளர்களுக்கு ஊதியத்தைக் குறைப்பது பெரும் பாவம்.

 

எனவே, ஸ்விகி நிறுவனம் உடனடியாக அதன் உணவு விநியோக பணியாளர்களை அழைத்துப்பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். இதற்கு தேவையான ஏற்பாடுகளை  தொழிலாளர் நலத்துறை மேற்கொள்ள வேண்டும். ஸ்விகி ஊழியர்கள் குடும்பப்பசியை போக்க வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.