ஒரு இந்திய பெண் அவமானப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது: ஜனாதிபதிக்கு தமிழக எம்.பி. கடிதம்

மதுரை நாடாளுமன்ற எம்.பி. எஸ்.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், டிசம்பர் 23ஆம் தேதி நடந்த புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தாங்கள் கலந்து கொண்டீர்கள். அதே விழாவில் ரபீஹா அப்துரஹிம் என்கிற மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

s.venkatesan

தங்கப் பதக்கம் வென்ற அந்த தொடர்பியல் துறை மாணவி நீங்கள் நுழைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டிருக்கிறார். நீங்கள் வெளியேறிய பிறகே மீண்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு காரணம் தனது தோற்றம்தான் என்று ரபீஹா சரியாகவே நம்புகிறார். எல்லா விதமான தேர்வுகளுக்கான சுதந்திரமும் உரிமையும் உள்ள ஒரு நாட்டில் ஹிஜாப் அணிந்தார் என்பதற்காக ஒரு இந்திய பெண் தனிமைப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

வன்முறையில் ஈடுபடுபவரை அவரது உடைகளை வைத்தே அடையாம் காண முடியும் என்று பிரதமர் சொன்னதன் நேரடி விளைவாகவே இந்த சம்பவத்தை பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு சமூகத்தையே இப்படி இழிவுப்படுத்துவதன் மூலம் இந்த நாட்டின் எதிர்காலமாகவும் நம்பிக்கையாகவும் ஒளிரும் ரபீஹா போன்றவர்களை அவர்களது உடைகளை வைத்து அவமானப்படுத்தும் செயல் இங்கு சாதாரணமாக அரங்கேறுகிறது.

ரபீஹாவுக்கு ஏற்ப்பட்ட இந்த இழிவை துடைக்க தாங்கள் முன்வர வேண்டும் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் கோருகிறேன். ரபீஹாவிடம் வருத்தம் தெரிவிப்பதன் மூலம் ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் ஒரு ஆரோக்கியமான செய்தியை நீங்கள் விடுப்பீர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அவர் மறுத்த தங்க பதக்கத்தை நீங்கள் ரபீஹாவுக்கு வழங்க முன்வர வேண்டும் என்றும் கோருகிறேன்.

சமத்துவத்தில் நம்பிக்கையுள்ள மதசார்பற்ற குடிமகனாகிய நான் விடுக்கும் இந்த கோரிக்கையை நீங்கள் நல் நோக்கத்தோடு பரிசீலித்து ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

issue Puducherry su venkatesan
இதையும் படியுங்கள்
Subscribe