Skip to main content

எது உண்மை?  நிதி  அமைச்சர் தான் விளக்க வேண்டும்... பாராளுமன்றத்தில் திருநாவுக்கரசர் பேச்சு

Published on 05/12/2019 | Edited on 05/12/2019

 

பாராளுமன்றத்தில் துணை நிதிநிலை அறிக்கை மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் புதன்கிழமை (4.12.19) மாலை சுமார் 5.30 மணியளவில் பேசினார்.
 

அப்போது அவர், '2019- 2020 பொது பட்ஜெட்டின் போது சுமார் 27.80 லட்சம் கோடி ஆண்டு செலவிற்கு அனுமதி பெறப்பட்டது. தற்போது 21,246 ஆயிரம் கோடி கூடுதல் செலவீனத்திற்கு நிதி ஒதுக்க விவாதம் நடைபெறுகிறது. இதன் மூலம் 3.3 சதவிகிதமாக எதிர்பார்க்கப்பட்ட, அறிவிக்கப்பட்ட பற்றாக்குறை தற்போது 3.7 சதவிகிதமாக உயரப்போகிறது. நாட்டின் மொத்த உற்பத்தி ஜி.டி.பி. 4.5 சதவிகிதமாக இருந்தது 4 சதவிகிதமாக குறைந்து விட்டது. 7.7 சதவிகிதமாக இருந்து, கடந்த 4 ஆண்டுகளாக குறைந்து தற்போது 4 சதவிகிதமாக ஆகியுள்ளது. பா.ஜ.க.வைச் சார்ந்த சுப்பிரமணிய சுவாமி எம்.பி ஜி.டி.பி 1.5 சதவிகிதம் தான். இது அதிகரித்து தவறாக சொல்லப்படுவதாக கூறுகிறார். எது உண்மை? நிதி அமைச்சர் தான் விளக்க வேண்டும்.

 

su.thirunavukkarasar


 

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது.  50 சதவிகிதம் பேர் வேலை பார்க்கக் கூடியவர்களுக்கு இந்தியாவில் வேலையில்லை.  உற்பத்தியில் முதலீடு குறைந்து வருகிறது.  குறிப்பாக தொழில் துறையில் முதலீடு குறைந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியன் கோடியாக 2023-ல் உயரும் என்ற இந்த அரசின் அறிவிப்பு இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும் நிறைவேற.  2033-34 - லாவது நடக்குமா என்பதே சந்தேகம்.
 

பிரதமர் அடிக்கடி வெளி நாடுகள் போய் வருகிறார்.  100 தடவைக்கு மேல் 100 நாடுகளுக்கு மேல் போயிருப்பார்.  வெளிநாடு வாழ் இந்திய (என்.ஆர்.ஐ). பிரதமர் போல் வெளிநாட்டில் வலம் வருகிறார்.  பார்க்காத நாடுகள் குறைவு, பார்க்காத மாநிலம், மாவட்டங்கள் இந்தியாவில் நிறைய உள்ளது.  வெளிநாடுகளில் இந்தியாவிற்கான வெளிநாட்டு முதலீடு F.D.I எவ்வளவு ஒப்பந்தம் இது வரை ஏற்பட்டுள்ளது   எந்தந்த  மாநிலங்களில் எவ்வளவு தொழிற் முதலீடு நடந்துள்ளது.  எவ்வளவு தொழில்கள் மாநில வாரியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன? எவ்வளவு பேருக்கு வேலை  கிடைத்துள்ளது, தமிழ்நாட்டில் எந்த வெளிநாட்டு முதலீடும் பெரிய அளவில் நிகழவில்லை.


 

பண பற்றாக்குறையை (Deficit Budget) நிவர்த்தி செய்ய, பொருளாதார சரிவை சரிகட்ட எல்லா அரசு பொதுத் துறை நிறுவனங்களையும் விற்க நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.  அரசு நிறுவனங்களில் அரசு முதலீட்டின் பெரும் பங்கை 51 சதவிகிதத்திற்கு மேல் அதிகம் தனியாருக்கு விற்பதால் அரசு சிறிய பங்குதாரராக மாற்றப்படுகிறது.  இது இந்தியாவில் முதல் முறையாக இப்போது தான் நடக்கிறது.

 

நிதி  அமைச்சர் திருச்சி பள்ளி, கல்லூரிகளில் படித்தவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு விற்க அரசு நடவடிக்கை எடுப்பதை நிதி அமைச்சர் தடுத்து நிறுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


 

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். தினச் சம்பளத்தை ரூபாய் 300-க்கு மேல் உயர்த்தி கிராமப்புற பெண்களுக்கு உதவ வேண்டும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு மாத பென்சன் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். மீனவர்களுக்கு மீன் பிடிக்காத காலத்தில் தரப்படும் உதவித் தொகை இறு மடங்காக உயர்த்தப்பட வேண்டும். 30 கோடி இளைஞர்களுக்கு நாட்டில் வேலையில்லை.  தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு வேலையில்லை.  வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்க வேண்டும்.
 

பாராளுமன்ற தொகுதியில் மக்களை சந்திக்க பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டித் தர வேண்டும்.  பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா ரூபாய் 2 கோடி வீதம் அதிகரிக்க வேண்டும்.  தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி 3 கோடியாகாவும், கேரளாவில் 6 கோடியாகவும், டெல்லியில் 10 கோடியாகவும் உள்ளது.  எனவே பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியை உயர்த்த வேண்டியது அவசியமாகும். இவ்வாறு பேசினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சில உண்மைகளை சொன்னதால் எதிர்கட்சிகள் பீதியடைந்துள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Opposition parties panics because some truths have been told

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், பிரதமர் மோடியும் அங்கு பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதற்கிடையில் அவர் தேர்தல் பரப்புரையில் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

PM Modi says Opposition parties panics because some truths have been told

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம், டோங் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று (23-04-24) நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஹனுமான் பாடலைக் கேட்பது கூட குற்றமாகிவிடும். இந்த முறை ராம நவமி அன்று முதல் முறையாக ராஜஸ்தானில் ஷோபா யாத்திரை ஊர்வலம் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் போன்ற மக்கள் ராம்-ராம் எனக் கோஷமிடும் மாநிலத்தில் ராம நவமிக்கு காங்கிரஸ் தடை விதித்துள்ளது.

இன்று அனுமன் ஜெயந்தி அன்று உங்களுடன் பேசும் போது, சில நாட்களுக்கு முன் எடுத்த ஒரு படம் நினைவுக்கு வருகிறது. சில நாட்களுக்கு முன், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில், கடையில் அமர்ந்து ஹனுமான் பாடலை கேட்டதால், கடைக்காரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். நேற்று முன்தினம் ராஜஸ்தானில், நான் சில உண்மையை நாட்டுக்கு முன் வைத்தேன். ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளும் பீதியடைந்து உள்ளது. உங்களின் சொத்துக்களை அபகரித்து, சிறப்பு வாய்ந்தவர்களுக்குப் பங்கிட காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை நான் முன்வைத்தேன்.

அவர்களது அரசியலை நான் அம்பலப்படுத்தியதும், அவர்கள் மிகவும் கோபமடைந்து, அவர்கள் என்னை அவதூறாகப் பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் ஏன் உண்மையைக் கண்டு பயப்படுகிறார்கள் என்பதை நான் காங்கிரஸிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் ஏன் தங்கள் கொள்கையை இவ்வளவு மறைக்கிறார்கள். நீங்களே கொள்கையை உருவாக்கியபோது, இப்போது அதை ஏற்க ஏன் பயப்படுகிறீர்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.