'Surely the double leaf symbol will come to us' - OPS believes

அதிமுக பல கூறுகளாக உடைந்து கிடக்கும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் குறித்தும், அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு என்ற பெயரில் ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி குறித்தும்பல்வேறு எதிர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்ட ஓ. பன்னீர்செல்வம் அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது பேசுகையில், ''துரோகத்தைப் பற்றி நீங்கள் கேட்டீர்கள். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஜெயலலிதா உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மகத்தான வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார்.

அந்த வெற்றியின் மூலம்தான் ஓபிஎஸ் முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளர் என்று தேர்தலில் நின்று வெற்றி பெறவில்லை. அது ஜெயலலிதா பெற்ற வெற்றி. அதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். ஜெயலலிதா எப்படி ஆட்சி நடத்தினாரோ அதேபோன்று இவரும் செய்திருக்க வேண்டும். முதலமைச்சராக யார் இவரை தேர்வு செய்தது? சசிகலா. பதவி கொடுத்த சசிகலாவை அவர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் விமர்சித்தார். அதுதான் அவர் செய்த மிகப்பெரிய நம்பிக்கை துரோகம்.

Advertisment

என்றுமே நான் என்னுடைய பணிகளை பொறுமையோடு தான் கடமைகளை செய்வேன். பொறுமையை இழக்கமாட்டேன். சொல்ல வேண்டிய கருத்துக்களை அழுத்தமாக சொல்வேன். அதில் உண்மைத்தன்மை இருக்கும். ஜெயலலிதா சொன்னதைத்தான் நான் செய்தேன். அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றுதான் எல்லோரும் சொல்லுகிறார்கள். ஆனால் உலகத்திலேயே சேரக்கூடாது என்று சொல்லுகின்ற ஒரே நபர் எடப்பாடி பழனிசாமி தான். இது உட்கட்சி பிரச்சனை. துரோகத்தின் வடிவமாக என்னை வெளியேற்றினார்கள். இது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். ஜனநாயகப்படி விவாதம் செய்து நான் என்ன தவறு செய்தேன் என்பதை பகிரங்கமாக சொல்லி நிரூபிக்க வேண்டும். உறுதியாக இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் வரும்'' என்றார்.