Skip to main content

உச்சநீதிமன்றத்திடமே குட்டு வாங்கியவர்! - யார் இந்த கே.ஜி.போபையா?

Published on 18/05/2018 | Edited on 18/05/2018

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அடுத்தடுத்து திடீர் திருப்பங்களைச் சந்தித்திருக்கிறது அங்குள்ள அரசியல் சூழல். தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்துடன் பா.ஜ.க.வின் எடியூரப்பா முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், அவர் பொறுப்பேற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நாளை மாலை 4 மணிக்கே பெரும்பான்மையை நிரூபிக்க கட்சிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

Bopaiah

 

இந்நிலையில், கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போபையா அவசர அவசரமாக நியமிக்கப்பட்டார். அவரது இந்த நியமனம் சட்டவிரோதமானது என்றும், உடனடியாக இந்த நியமனத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் காங்கிரஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

யார் இந்த கே.ஜி.போபையா?

 

இளமைக் காலத்தில் இருந்தே சங்பரிவார் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டவர் இவர். 1990ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் கர்நாடக மாநில தலைவராக பொறுப்பேற்ற இவர், 2004 மற்றும் 2008 ஆகிய இரண்டு சட்டசபைத் தேர்தல்களில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எடியூரப்பாவின் தீவிர விசுவாசியாகவும் இவர் இருந்ததாக விமர்சனங்கள் உண்டு. 

 

Bopaiah

 

இந்த விமர்சனம் உண்மையானது!

 

2011ஆம் ஆண்டு சுரங்க ஊழல் நடைபெற்றபோது, பா.ஜ.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் மற்றும் 5 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில், அச்சமயம் கர்நாடக சட்டசபையில் சபாநாயகராக பொறுப்பில் இருந்த போபையா, அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அத்தனை பேரையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். போபையாவின் இந்த உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டாலும், உச்சநீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. சபாநாயகர் போபையாவின் இந்த நடவடிக்கை ஒருதலைபட்சமானது மற்றும் அவசரகதியில் இருக்கிறது எனக்கூறி அதை நிராகரித்து தீர்ப்பளித்தது.

 

ஏன் சர்ச்சை?

 

சபாநாயகராக செயல்பட்டபோது மேற்கொண்ட நடவடிக்கையால் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட ஒருவர், மீண்டும் சபாநாயகராக ஆக்கப்பட்டால் சர்ச்சைகள் எழத்தானே செய்யும். அதேசமயம், 8 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் ஆர்.வி.தேஷ்பாண்டே மற்றும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் உமேஷ் கர்தி ஆகியோர் இருக்கும்போது, சர்ச்சைக்குரிய ஒருவர் சபாநாயகராக பொறுப்பேற்றிருப்பது மேலும் சர்ச்சையைக் கூட்டியிருக்கிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

"பாஜகவுக்கு எதிரான அலை" - சரத் பவார் 

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

nationalist congress cheif Sharad Pawar says anti bjp wave is sweeping

 

கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது. இந்தத் தேர்தல் முடிவானது வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது.

 

மேலும் இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தேர்தல் முடிவை பார்க்கும் போது மக்கள் மாற்றத்தை விரும்புவது தெரிகிறது. ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதால் நாட்டில் பாஜகவுக்கு எதிரான அலை வீசுகிறது. இதை சொல்வதற்கு ஜோதிடர் தேவை இல்லை. கர்நாடக தோல்வியை தொடர்ந்து மத்தியில் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே கவனம் செலுத்தும். மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன், மாநில சட்டமன்ற தேர்தல்களையும் சேர்த்து நடத்தும் திட்டம் குறித்து குழப்பி கொள்ள வாய்ப்பில்லை " எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

சட்டமன்றத்தில் தோல்வி; நாடாளுமன்றத்தில் கூட்டணி? - தேவகவுடா பதில்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

assembly election loss parliamentary election alliance devegowda answer 

 

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் முதலில் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது. இருப்பினும் சட்டமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாகவே எடியூரப்பா தனது பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து  மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து முதல்வர் ஆனார்.

 

சுமார் ஒரு ஆண்டு காலம் ஆட்சி நடைபெற்ற நிலையில் சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து பாஜகவானது  எடியூரப்பா தலைமையிலும், அவரைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை தலைமையிலும் ஆட்சி அமைத்து பாஜக ஆட்சிக் காலத்தை நிறைவு செய்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்து நின்று தேர்தலை சந்தித்தன. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி நடத்தி வருகிறது.

 

மேலும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுற்றுள்ள நிலையில் அம்மாநிலம் உட்பட இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும், வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் தேசியத் தலைவருமான தேவகவுடா, பெங்களூருவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து போட்டியிட முயற்சித்து வருவதாகச் சில கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

 

நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தனித்துப் போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தோம். அதனை நம்பாமல் மதச்சார்பற்ற ஜனதா தளம், பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்று சொல்லி வருகின்றனர். நாட்டில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காத கட்சி ஏதாவது உண்டு என்றால் தைரியமாக சொல்லட்டும் பார்க்கலாம். அதன் பின்னர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து பேசலாம்" என்றார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமியும் உடன் இருந்தார்.