Summons Kejriwal; Kapilcipal angry

அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, சிசோடியாவின் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தியானத்தில் ஈடுபட்டார். முன்னதாக தனது தியானம் குறித்து பேசிய அவர், “மக்களுக்கு தரமான கல்வியையும் மருத்துவத்தையும் கொடுக்க நினைத்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் பிரதமரின் செயல் கவலை அளிக்கிறது” என்றார். மேலும், நாட்டின் நலன் குறித்து தான் கவலைப்படுவதாகவும், அதனால் நாட்டின் நலனுக்காக ஹோலி பண்டிகை அன்று தியானம் இருக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.

Advertisment

தொடர்ந்து, மதுபானகொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நாளை (16/04/2023) அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜர் ஆகிறார்.

இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் இது குறித்து கூறும்போது, “2 முதல் 3 முறை கெஜ்ரிவாலை விசாரணைக்கு அழைப்பார்கள். அரசியல் எதிரிகளை ஒழிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்களைக் குறிவைத்து மோடி அரசு செயல்படுகிறது. அவர்கள் அதை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார்கள். சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரை குறிவைத்து வருகின்றனர். விசாரணை அமைப்புகளை தூண்டிவிட்டு நெருக்கடி கொடுக்கும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது” எனக் கூறினார்.