Skip to main content

திடீர் அழைப்பு; வந்த வேகத்தில் மீண்டும் டெல்லி செல்லும் ஆளுநர்

Published on 16/01/2023 | Edited on 16/01/2023

 

Sudden call; the governor is going back to Delhi as soon as he arrived

 

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அவசர அழைப்பின் பேரில் மீண்டும் டெல்லிக்கு விரைகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழ்நாடு சட்டப்பேரவையில்  ஆளுநர் உரையின் போது சில வாக்கியங்களை இணைத்தும், தவிர்த்தும் ஆளுநர் பேசிய விவகாரம் சர்ச்சையானது. ஆளுநரின்  செயல்களுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் ஆளுநரைக் கோபப்பட வைத்த நிலையில் அவர் சபையிலிருந்து அவசரம் அவசரமாக வெளியேறினார்.

 

இதனையடுத்து  ஆளுநரை ஒருமையில் விமர்சித்தல், கொலை மிரட்டல் விடுத்தல் என திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையாக பேசினார். அவரது அராஜக பேச்சும், தொடர்ந்து  திமுகவினரின் அநாகரீக போக்கும் அறிந்து மிகவும் கோபமானார் ஆளுநர் ரவி. உடனே ஆளுநரின் உத்தரவின் பேரில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது போலீஸ் கமிஷ்னரிடம் புகார் கொடுத்தார் ஆளுநரின் செக்ரட்டரி பிரசன்ன ராமசாமி.  கவர்னர்  புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்படுவார் என ராஜ்பவன் எதிர்பார்த்தது. ஆனால், எஃப்.ஐ.ஆர். கூட போடப்படவில்லை.

 

Sudden call; the governor is going back to Delhi as soon as he arrived

 

ஆளுநர்  டெல்லி சென்று திரும்பிய நிலையிலும், அவர் கொடுத்த புகாரை கிடப்பில் போட்டுவிட்டது போலீஸ் கமிஷனர் அலுவலகம். இதனால் தமிழ்நாடு அரசு மீதும், காவல்துறை அதிகாரிகள்  மீதும்  கடும் கோபமடைந்துள்ளார் கவர்னர். இந்த நிலையில், திமுக முன்னாள் எம்.பி.யும் சீனியர்களில் ஒருவருமான ஆர்.எஸ்.பாரதியும்  ஆளுநரை ஒருமையில் விமர்சித்தார். இதுவும் சர்ச்சைகளை உருவாக்கியது. திமுகவின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய  முதல்வர் ஸ்டாலினினும் ஆளுநரை ஒருமையில் பேசினார்.  இவைகள்  அனைத்தும் மத்திய உளவுத்துறையினர் சேகரித்து பிரதமர் அலுவலகத்துக்கும், ஆளுநருக்கும் ரிப்போர்ட் அனுப்பியுள்ளனர்.

 

இந்த விவகாரங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் ஆலோசித்தபடி இருந்தார். இந்த நிலையில் தான், ஆளுநரைத் தொடர்பு கொண்டு டெல்லிக்கு வருமாறு மீண்டும் அழைத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். இதனையடுத்து நாளைக்கு அவர் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார். கடந்த 12-ந்தேதி டெல்லிக்கு சென்று விட்டு மறுநாள் சென்னை திரும்பிய ஆளுநரை மீண்டும் டெல்லி அழைத்திருப்பது ஆளும் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்பவன் கொடுத்தபுகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் திமுக அரசு மீது ஆளுநரின் கோபம் அதிகரித்துள்ளது என்கிறது ராஜ்பவன் வட்டாரம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
West Bengal Governor insists on dismissing the minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.