Skip to main content

மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சுபஸ்ரீயின் பெற்றோர்!

Published on 24/09/2020 | Edited on 24/09/2020
subhashree parents - mkstalin meeting - velacher admk Banner issue -

 

 

வேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பம் விழுந்து பலியான சுபஸ்ரீயின் பெற்றோர், இன்று (24-9-2020), சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சட்டரீதியாக இந்த பிரச்சனையை வெளிக்கொண்டு வந்து துணை நின்றதற்கு நன்றி தெரிவித்தனர்.

 

கடந்த ஆண்டு 12.9.19 அன்று வேளச்சேரி பகுதியில் அ.தி.மு.க.வினர் திருமண வரவேற்பு நிகழ்வுக்காக சாலையின் நடுவே வைத்த பேனர் சரிந்து விழுந்ததில் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர் சுபஸ்ரீ பலியானார். இதற்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, தி.மு.க. சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கினார்.

 

இதனைத் தொடர்ந்து சுபஸ்ரீயின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி, காவல்துறை மீது சட்டத்தை முறையாக செயல்படுத்தாதது தொடர்பாகவும், நிவாரணம் வழங்க கோரியும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தற்போது தீர்வு எட்டப்பட்டு 20 லட்ச ரூபாய் சுபஸ்ரீயின் பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ளது. சுபஸ்ரீ மரணத்தை தமிழகம் முழுவதும் வெளிக்கொண்டு வந்து - சட்டரீதியாக துணை நின்றதற்கு, சுபஸ்ரீயின் பெற்றோர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்தசந்திப்பின்போது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்  இ.கருணாநிதி உடனிருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி கொலை; பெற்றோர் உட்பட 3 பேர் கைது!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
girl child incident for Bagalur near Hosur in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் பிரகாஷ் (வயது 40) - காமாட்சி (வயது 35) என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 14 ஆம் தேதி (14.02.2024) வீட்டில் இருந்து வெளியே சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலில் காயங்களுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது இளைஞர் ஒருவரை சிறுமி காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிவாவுடன் பழகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என பெற்றோர் கூறியதை சிறுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோரே கட்டையால் தலையில் தாக்கி கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமி காணாமல் போன அன்று வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா துணியால் மறைக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பெற்றோரான பிரகாஷ் - காமாட்சி மற்றும் சிறுமியின் பெரியம்மா காமாட்சி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

Next Story

மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
To the students and parents, cm M.K. Stalin's key instruction

2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1 ஆம் தேதி (01.03.2024) தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்து 302 மையங்களில் 4.13 லட்சம் மாணவியர், 3.58 லட்சம் மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 7.72 லட்சம் பேர் தேர்வெழுத உள்ளனர். இதில் 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள், 125 சிறைவாசிகளும் அடங்குவர்.

மேலும் பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் சுமார் 47 ஆயிரம் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க 4 ஆயிரத்து 200 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மாவட்ட ஆட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை நாளை எழுத உள்ள மாணவர்களுக்கும் மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்தகட்டமான +2 இறுதித் தேர்வை அச்சமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன். தேர்வு என்பது மற்றுமொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர, அதுவே உங்களது திறமையை எடைபோடுவதற்கான அளவுகோல் கிடையாது. எனவே எவ்விதப் பதற்றமும் வேண்டாம். பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து தங்களது குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்த்து, அவர்களது வெற்றிக்கு ஊக்கமளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.