ADVERTISEMENT

ஆளுநருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்; ஒன்றிணைந்த மாணவர் கூட்டமைப்பு

04:20 PM Jun 16, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவிரி மருத்துவமனைக்கு நேற்று இரவு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை தற்பொழுது நிதித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தங்கம் தென்னரசுவிற்குக் கூடுதல் துறையாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரையைத் தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியது.

இந்த பரிந்துரையை ஆளுநர் மறுத்து திருப்பி அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் திமுகவினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்கலைக்கழகங்களில் பட்டமளிக்கும் கடமையை செய்யாமல் தவிர்த்தல், துணை வேந்தர்கள் நியமனத்தில் மத்திய அரசின் ஆதிக்கத்தை கொண்டுவர முனைதல், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளது போன்றவற்றை கண்டித்தும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே மாணவர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திமுக மாணவர் அணி, இந்திய மாணவர் சங்கம், திராவிடர் மாணவர் கழகம் ஆகியவை அடங்கிய மாணவர் கூட்டமைப்பினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 500க்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மாணவரணி செயலாளர் எழிலரசன், “அவர் ஆளுநராக பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து பட்டமளிப்பு விழாவையே நடத்தாமல் மாணவர்களை வஞ்சித்துக் கொண்டிருப்பதை கண்டித்தும், உடனடியாக ஆளுநர் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவிற்கு தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களையோ, அறிஞர்களையோ அழைப்பதற்கு பதிலாக சனாதனம் பேசக்கூடிய வடநாட்டில் இருப்பவர்களை அழைத்து வருவதில் முனைப்பு காட்டுகிறார். இதை திமுக உள்ளிட்ட மாணவர் கூட்டமைப்பு கடுமையாக கண்டிக்கிறது” என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT