Skip to main content

திருச்சியில் விசிக வணிகர் அணி மாநில மாநாடு - 6 தீர்மானங்கள்

Published on 05/05/2018 | Edited on 05/05/2018
tm

 

 திருச்சியில் இன்று நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைத் திரும்பப் பெறுக

ஒரே நாடு ஒரே வரி என்ற பெயரில் மத்தியில் ஆளும் பாஜக அரசால் திணிக்கப்பட்டிருக்கும் ‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சிறு வணிகர்களை முற்றாக அழித்துக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே பாஜக அரசின் பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையால் விழிபிதுங்கிக் கொண்டிருந்த வணிகர்கள், அவர்களின் ஒப்புதலின்றி திணிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் மூச்சுத் திணறிக்கொண்டுள்ளனர். ஒரே வரி எனக் கூறப்பட்டாலும் பல அடுக்கு வரிகள் போடப்படுகின்றன. அதுமட்டுமின்றி கூடுதல் வரிகளும் (செஸ்) விதிக்கப்படுகின்றன. உலகில் எந்த நாட்டிலும் இத்தகைய கடுமையான வரிவிதிப்பு முறை கிடையாது. இதனால் வணிகர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையைத் திரும்பப் பெறவேண்டுமென மத்தியில் ஆளும் பாஜக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

2. சட்டத்துக்குப் புறம்பான ஆன் லைன் வர்த்தகத்தை தடைசெய்க!

ஆன் லைன் வர்த்தகத்தில் இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அன்னிய நேரடி முதலீட்டு விதிகளுக்குப் புறம்பாக அவை ஏராளமான தள்ளுபடிகளை அவ்வப்போது அறிவிப்பதால் சில்லறை வணிகம் மிகப்பெரிய நட்டத்தை சந்தித்து வருகிறது. இதுகுறித்து மத்திய அரசிடம் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை அதைத் தடுப்பதற்கு பாஜக அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சட்டத்துக்குப் புறம்பான ஆன் லைன் வர்த்தகத்தைத் தடுத்து நிறுத்துமாறு இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

 

3. சிறு வணிகர்களுக்கு கடன் உதவி வழங்குக!

பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையாலும், ஜிஎஸ்டி வரிவிதிப்பாலும் பெரும் நெருக்கடியைச் சந்தித்துவரும் சிறு வணிகர்களுக்கு பொதுத்துறை வங்கிகள் கடன் வழங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் நகை வியாபாரிகளுக்கும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் கடன்களை எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் வழங்குகின்றன.அவர்கள் வங்கிகளை மோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டே ஓடுகின்றனர். பொதுத்துறை வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகளும் சிறு வணிகர்களுக்குக் கடன் வழங்க முன்னுரிமை அளிப்பதற்கு மத்திய அரசு உத்தரவிடவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

4. நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்களின் உற்பத்தியை தடை செய்க

எளிதில் மட்காத நெகிழிப் பொருட்களால் மண் வளமும், நீர் வளமும் பாதிக்கப்படுவதோடு மக்களுக்கு எண்ணற்ற நோய்களும் வருகின்றன. நெகிழிப் பொருள் உற்பத்தி குறித்து அரசு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும் அவை சரியாகக் கடைபிடிக்கப்படுவதில்லை. அதைக் கண்காணிப்பதற்கான கட்டமைப்பு வசதியும் அரசிடம் இல்லை. உற்பத்தி செய்யும் இடத்தில் விட்டுவிட்டு நெகிழி பொருட்களைப் பயன்படுத்துவதாக வணிகர்களை அரசு அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள். எனவே நெகிழியால் பை, தேநீர் குவளைகள் முதலானவற்றைத் தயாரிப்பதற்கு தடை விதிக்கவேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

5. வாடகையை முறைப்படுத்துக

நகராட்சி, மாநகராட்சி, அறநிலையத் துறை கடை வாடகை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. உணவகங்கள், கடைகளில் உருவாகும் குப்பைக்கு குப்பை வரி விதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி உருவாகும் குப்பைகளை வணிக நிறுவனங்களே மறுசுழற்சி செய்யவேண்டும் என  வலியுறுத்தப்படுகிறது. இதனால் வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் முறைப்படுத்திட தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

 

6. சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு கூடாது

சில்லறை வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்படிச் செய்தால் சிரு வணிக முற்றாக அழிந்துவிடும். இந்தியா முழுவதும் அதை நம்பியுள்ள கோடிக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகிவிடும். எனவே அந்த ஆபத்தான முயற்சியில் ஈடுபடவேண்டாமென மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.