Skip to main content

பெரிய அய்யாவும் சின்ன அய்யாவும் எடப்பாடிக்கு மணி அடிக்கும் பூசாரிகள் ஆகிவிட்டனர்...! மு.க.ஸ்டாலின் தாக்கு

Published on 23/03/2019 | Edited on 23/03/2019

எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய அய்யாவும், சின்ன அய்யாவும் மணி அடிக்கும் பூசாரிகளாகிவிட்டனர் என்று சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 

stalin

 

சேலம் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது:


மறைந்த திமுக தலைவர் கலைஞர் பிறந்த திருவாரூரில் தேர்தல் பரப்புரையை நேற்று முன்தினம் தொடங்கி, அவர் வளர்ந்த தஞ்சையில் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து, நேற்று பெரம்பலூரிலும் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, 'இந்த நாடும் நமதே, நாற்பதும் நமதே' என்ற முழக்கத்தோடு இன்று மூன்றாவது நாளாக சேலத்திற்கு வந்திருக்கிறேன்.


செல்லும் இடங்களில் எல்லாம் அலைகடலென மக்கள் திரண்டு வருவதைப் பார்க்கும்போது நிச்சயமாக வரும் தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம் என்பது தெளிவாகிறது. இங்கே கூடியுள்ள கூட்டத்தைப் பார்க்கும்போது மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல; மத்தியில் உள்ள பாஜக மீதும், மாநிலத்தில் ஆளும் அதிமுக மீதும் ஏற்பட்டுள்ள வெறுப்பையும் காட்டுகிறது.


இன்றைக்கு ஆட்சியில் உள்ள அதிமுக ஏதாவது சாதனைகள் செய்திருப்பதாக சொல்ல முடியுமா? கொடநாடு கொலை, கொள்ளை, அமைச்சர்கள் முதல் டிஜிபி வரை குட்கா ஊழல் புகார், ஒன்றரை லட்சம் அரசு ஊழியர்களை டிஸ்மிஸ் செய்தது, ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது திராவகம் வீசியது என பல வேதனைகளைத்தான் இந்த அரசு கொடுத்திருக்கிறது.


ஜெயலலிதா அம்மையார் ஓய்வு எடுக்க ஊட்டி கொடநாட்டில் உள்ள ஆடம்பர பங்களாவுக்குச் செல்வதுண்டு. அதிமுக அமைச்சர்கள் பலர் சொத்துக்குவித்துள்ள ஆதாரங்களை எல்லாம் பென் டிரைவில் சேமித்து வைத்திருந்தார். முக்கிய ஆவணங்களை வைத்திருந்தார். அந்த பங்களாவில் அவர் 2,000 கோடி ரூபாய் வைத்திருந்தார். அவற்றையெல்லாம் கொள்ளை அடிப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரளாவைச் சேர்ந்த கூலிப்படையை அனுப்பி வைத்தார்.


கொள்ளையை தடுக்க முற்பட்ட கொடநாடு பங்களாவின் காவலாளி கொல்லப்படுகிறார். அதன்பின் தொடர்ச்சியாக மேலும் நான்கு பேர் உள்ள 5 பேர் கொல்லப்படுகின்றனர். யாரை வைத்து எடப்பாடி பழனிசாமி இந்த காரியங்களை செய்தாரோ அவரே இதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த சயன் என்பவர் தலைமையில் சென்ற கும்பல்தான் கொடநாட்டில் கொள்ளை, கொலை சம்பவங்களில் ஈடுபட்டது. சயனும் இதை ஒப்புக்கொண்டுள்ளார்.


முன்பு ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மூலம்தான் இந்த வேலைகளை எடப்பாடி பழனிசாமி செய்து முடித்ததாக சயன் தெரிவித்துள்ளார். எடப்பாடி சொன்னதன்பேரில் கனகராஜ், சயனிடம் 5 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளார். உண்மைகள் வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதற்காக சயன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது திட்டமிட்டு விபத்து மூலம் அவரை கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது. அதில் சயன் தப்பித்து விட்டாலும், அவருடைய மனைவியும், குழந்தையும் உயிரிழந்து விட்டனர். கனகராஜூம் மர்மமான முறையில் இறந்து விட்டார். கனகராஜ் மரணத்திலும் எடப்பாடிக்கு தொடர்பு இருப்பதாக அவருடைய அண்ணன் தனபால் பேட்டி அளித்திருக்கிறார். இத்தனைக்கும் தனபாலும் அதிமுககாரர்தான். 

 

stalin


சயன் வெளிப்படையாகவே குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், இதுவரை எடப்பாடி பழனிசாமி அவற்றுக்கு மறுப்பு தெரிவிக்காதது ஏன்? கனகராஜின் சாவுக்கு எடப்பாடிதான் காரணம் எனக்கூறிய போதும் அவர் மீது ஏன் எடப்பாடி வழக்கு போடாமல் இருக்கிறார்? அதனால்தான் அவர் மீது எல்லோருக்கும் சந்தேகம் வலுக்கிறது. விரைவில் இந்த ஆட்சி அகற்றப்பட்டு திமுக ஆட்சி அமையும். அப்போது கொடநாடு கொள்ளை, கொலைகள் குறித்து விசாரணை நடத்தப்படும். நிச்சயமாக எடப்பாடி சிறைக்கு செல்வார். சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடப்படும். 


துணை முதல்வராக உள்ள ஓபிஎஸ் மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருக்கிறது. உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி மீது ஸ்மார்ட் சிட்டி ஊழல் புகார், அமைச்சர் தங்கமணி மீது நிலக்கரி ஊழல், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குட்கா ஊழல், முட்டை ஊழல் என இந்த எடப்பாடி அரசில் கிரிமினல் கேபினட்தான் அமைந்திருக்கிறது. கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன் என்றுதான் இந்த ஆட்சி செயல்படுகிறது. 


இதையெல்லாம் லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியிடம் புகார் சொல்லலாம் என்றால் அவர் மீது பாலியல் புகார் இருக்கிறது; அவருக்கு மேல் உள்ள டிஜிபியிடம் சொல்லலாம் என்றால் அவர் மீது குட்கா ஊழல் புகார் உள்ளது. ஆளுநரிடம் புகார் சொல்லலாம் என்றால் அவரோ நிர்மலாதேவி புகாரில் சிக்கியிருக்கிறார். இவர்கள் இப்படி என்று, மோடியிடம் சொல்லலாம் என்றால் அவரும் ரபேல் ஊழல் புகாரில் சிக்கியிருக்கிறார். மோடியும், எடப்பாடியும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.


அவர்களுடன் இப்போது மூன்றாவதாக ஒரு பெரிய அய்யா சேர்ந்துள்ளார். கடந்த ஐந்து வருடமாக ஆளும் கட்சியைப் பார்த்து நாம் கூட அப்படி திட்டியது கிடையாது. அந்தளவுக்கு கேவலமாக திட்டோ திட்டு என்று திட்டிவிட்டு, இப்போது கூட்டணி சேர்ந்திருக்கிறார். ஏனென்றால் அந்த அய்யா, அவர்களிடம் கேட்ட சீட்டு மட்டும் அல்ல, 'கேட்டது எல்லாம்' கிடைத்திருக்கிறது.   


இந்த பெரிய அய்யாதான், அம்மையார் ஜெயலலிதா பற்றி, அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி, அம்மையார் கொள்ளையடித்தது பற்றி தொகுத்து 'அதிமுகவின் கதை' என்று புத்தகமாக வெளியிட்டார். அந்த புத்தகத்தில் ஓரிடத்தில், 'தான் கொள்ளை அடித்தது எல்லாவற்றையும் ஒரு முதலீடாக வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி, முதல்வர் பதவியை குத்தகைக்கு எடுத்திருக்கிறார்.


கடவுள் இல்லை என்று சொன்ன முதல்வரை பார்த்து இருக்கிறோம். கடவுள் உண்டு என்ற முதல்வரையும் பார்த்து இருக்கிறோம். ஆனால் நான்தான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு முதல்வர் எடப்பாடி பழனிசாமி,' என்று சொன்னதும் நான் அல்ல; அந்த பெரிய அய்யாதான். இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு மணி அடிக்கும் பூசாரிகளாக பெரிய அய்யாவும், சின்ன அய்யாவும் சேர்ந்துள்ளனர். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


பின்னர் திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு பேசினார். முன்னதாக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன், வாக்கு கேட்டு பேசினார். இக்கூட்டத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா, காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவரான கே.வி.தங்கபாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை வெப்பம்; தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Tamil Nadu Chief Minister M. K. Stalin's instructions for summer heat

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்க்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது, “வெப்ப நிலை அதிகரிக்கும். வெப்ப அலை வீசும், என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அலையும் ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும். அதனால்தான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன். இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாகக் கருதுகிறேன். வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுக்காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கோடை வெயிலினால் அதிக வியர்வை வெளியேறும்போது. உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பணிநேரங்களில் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். தாகம் இல்லை என்றாலும், போதிய அளவு நீரை தொடர்ந்து பருகவேண்டும். அதிக அளவில் மோர், அரிசிக்கஞ்சி, இளநீர், எலுமிச்சைப் பழச்சாறு போன்றவற்றை பருகவேண்டும். உணவுப் பழக்க வழக்கங்களில் மாறுதல்களைச் செய்து கொள்ள வேண்டும். நீர்ச்சத்து காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். பழச்சாறுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

பயணத்தின்போது துணி, துண்டு, தொப்பி குடிநீர் எடுத்துச் அணிந்து செல்லவேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். வியர்வை எளிதாக வெளியேறும் வகையில் மிருதுவான. தளர்ந்த, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வயது முதிர்ந்தவர்கள் நடந்து செல்லும் போது களைப்பாக இருந்தால் நிழலில் சற்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வெப்பம் அதிகமாக உள்ள திறந்த வெளியில் வேலை செய்யும்போது, களைப்பு, தலைவலி, தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச்செல்லவேண்டும். மேலும், தண்ணீர், எலுமிச்சைப் பழச்சாறு, ஓ.ஆர்.எஸ். பருக வேண்டும். மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் அருகிலுள்ள நபரை உதவிக்கு அழைக்கவும். மிகவும் சோர்வாகவோ, மயக்கமாகவோ இருந்தால் மருத்துவ உதவியை நாடவேண்டும். சிறுபிரச்சனை என்றாலும் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அனைத்து பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மூலமாகவும், அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமாகவும், பொதுமக்கள். திறந்த இடங்களில் பணிபுரிவோர், நீண்டதூரம் சாலை பயணங்களை மேற்கொள்வோர் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். அரசு அதிகாரிகள், அலுவலர்கள் அனைவரும் மக்கள் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்