Skip to main content

“எம்.ஜி.ஆர்-க்கு ஸ்டாலின் மரியாதை செய்கிறார்.. இ.பி.எஸ். அவமானப்படுத்துகிறார்..” - கொதிக்கும் புகழேந்தி

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

"Stalin pays homage to MGR. Edappadi palanisamy Insults. ”- Pukahendi

 

சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் முன்னாள் தமிழக முதல்வர் பழனிச்சாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி 27 அமாவாசைக்குள் மாறும் எனக் கூறுகிறார். சினிமா படம் தான் நினைவுக்கு வருகிறது. அமாவாசை என்றால் பழனிசாமிக்குத் தான் மிகவும் பொருந்தும். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி எதிர்த்து நின்றபோது, இன்றைய முதல்வர் ஸ்டாலின் நினைத்திருந்தால் ஆட்சியைக் கவிழ்த்திருக்கலாம். ஆனால், அதனை விரும்பவில்லை. தேர்தல் மூலம் வெற்றி பெற்று ஆட்சியை அமைப்போம் எனக்கூறித் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளார். இதனை மறந்து மக்களை திசைதிருப்ப, அமாவாசை கதைபேசும் அமாவாசை பழனிசாமிக்கு கண்டனம்.

 

மேற்கு வங்கம்போல் சட்டசபையை முடக்குவோம் எனக் கூறுவது பழனிசாமி சர்வாதிகார பேச்சைக் காட்டுகிறது. தமிழக ஆளுநர் என்ன தலையாட்டி பொம்மையா? இவருக்கு சட்டமன்றத்தை முடக்கப் போவதாக எப்போது கூறினார் புரியவில்லை. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் சொல்லி வரும் ஒரே நாடு, ஒரே தேர்தல், என்பது சாத்தியமில்லை, ஒரே ஜெயில் என்பது தான் சாத்தியமான ஒன்று.

 

தேர்தல் பரப்புரையில் இதுவரை ஒ.பன்னீர்செல்வமும், பழனிசாமியும் நகர்ப்புற உள்ளாட்சியில் வெற்றி பெற்றால் மக்களுக்கு என்ன சேவை செய்ய போகிறோம் எனச் சொன்னது உண்டா. 2021 உள்ளிட்ட அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காக மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் எனத் தீர்மானம் நிறைவேற்றியது என்ன ஆயிற்று.

 

நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி இல்லை. தேசிய முற்போக்கு கூட்டணி தொடர்கிறது. தேர்தல்களில் கூட்டணி உண்டு என பாஜக தலைவர் அண்ணாமலையும், பழனிசாமியும் கூறுவது அ.தி.மு.க. அடிமை சாசனத்தை உறுதி செய்கிறது. 

 

பழனிசாமி, 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக, கோடிக் கணக்கில் பல வகைகளில் செலவு செய்தார். உள்ளாட்சித் தேர்தல் போட்டியிடும் சாதாரண அடிமட்ட தொண்டருக்குச் செலவு செய்யாதது ஏன்? தி.மு.க. அரசு மீதும், முதல்வர் ஸ்டாலின் மீதும், மக்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை. ஒரே வெறுப்பு தான் பழனிசாமி உள்ளிட்ட ஊழல்வாதிகளை இன்னும் கைது செய்யவில்லை என்கிற அதிருப்திதான் உள்ளது.

 

அனுதினமும் நாங்கள் போற்றி புகழ்பாடி வணங்கும் எம்.ஜி.ஆர் உருவத்தில் தெரிந்த ஒருவர், எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்ததை எடப்பாடி பழனிசாமி வரவேற்பது எம்.ஜி.ஆரை அவமானப்படுத்தும் செயல் அல்லவா. அதே நேரத்தில் தமிழகத்தினுடைய முதல்வர் ஸ்டாலின், எம்.ஜி.ஆர் பிறந்தநாளை அரசு விழாவாக எடுத்துள்ளார். மறைந்த நாவலருக்குச் சிலை கண்டுள்ளார். அம்மா கேண்டீன் தொடர உத்தரவிட்டுள்ளார். நீட் விஷயத்தில் அம்மாவை காட்டி எதிர்ப்பை பாராட்டிப் பேசி வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவை அவமானப்படுத்தி வருகிறார்” என்று பேசினார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.