ADVERTISEMENT

அ.தி.மு.க ஆட்சிக்கு கோமா நிலை வந்துவிட்டது: மு.க.ஸ்டாலின்

12:37 PM Sep 03, 2018 | rajavel

திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையில் உடைந்து போயிருக்கும் மதகுகளை நேரில் பார்வையிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். பின்னர், கடம்பா ஏரி, புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மற்றும் உய்யக்கொண்டான் நீட்டிப்பு பாசன கடைமடை விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களுடைய குறைகளையும் கேட்டறிந்தார்.

ADVERTISEMENT

முக்கொம்பில் உடைந்து போன மதகுகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு அவர்,

ADVERTISEMENT

இப்பொழுது தமிழகத்திலே நடந்து கொண்டிருக்கக்கூடிய எடப்பாடி தலைமையிலான இந்த ஆட்சி முக்கொம்பு மதகுகள் போலத் தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த முக்கொம்பு பகுதிகளில் உடைந்திருக்கக்கூடிய இந்த மதகுகளை முன்கூட்டியே தமிழக அரசு ஆய்வு செய்திருந்தால் இதை நிச்சயமாக தவிர்த்திருக்க முடியும். முறையான அறிவிப்பு இல்லாத வகையில் திடீர் என்று தண்ணீரை அதிகமான அளவிற்கு திறந்து விட்ட காரணத்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

எனவே, அரசினுடைய அலட்சியத்தினால் மட்டுமே இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. எனவே, இதற்கு உடனடியாக எடப்பாடி பழனிசாமி அவர்கள், தார்மீக பொறுப்பேற்றுக்கொண்டு ராஜினாமா செய்திட வேண்டும் என்பது தான் எல்லோருடைய கோரிக்கையாக இருக்கிறது.

கடந்த 24-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இங்கு வந்து பார்வையிட்டு உடனடியாக இந்தப் பணி முடிவடையும் என்று ஒரு உறுதியை தந்துவிட்டு சென்றிருக்கிறார். ஆனால், இன்னும் 40 சதவிகித பணிகள் கூட முடியாத நிலையிலே தான் இருந்து கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல, "காய்ச்சல் சொல்லிக் கொண்டு வருவது கிடையாது, திடீர் என்று வந்து விடுகிறது" என்று ஒரு அறிவுப்பூர்வமான கருத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டிக்கிறார்கள். அவர் சொன்னது எதை காட்டுகிறது என்றால் “ரோம் நகரம் பற்றி எரிகிற நேரத்தில் நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப் போல”, நீரோ மன்னனுடைய வாரிசு போல, ஒரு அபூர்வமான கருத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

காய்ச்சல் ஏதோ சொல்லாமல் வருகிறது, ஆனால் கமிஷனை பொறுத்த வரையில் சொல்லிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் இந்த ஆட்சியிலே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மேட்டூர் அணையை பொறுத்தவரையில் கடந்த மாதம் 19-ம் தேதி திறந்துவிடப்பட்டிருக்கிறது. மேட்டுர் அணை திறந்து விடப்பட்டு ஏறக்குறைய 47 நாட்கள் ஆகியிருக்கின்றன. ஆனால், இன்னும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரமுடியாத நிலையில் தான் இருக்கிறது.

இந்த ஆட்சியைப் பொறுத்த வரைக்கும், எடப்பாடி பழனிசாமியை அவர்களை பொறுத்த வரைக்கும் கமிஷனை தூர்வாரிக் கொண்டிருக்கிறார்களே தவிர, கால்வாய்களை தூர்வாரும் நிலையில் இல்லை என்கிற நிலையிலே தான் இருந்து கொண்டு வருகிறது.

ஏறக்குறைய 5000 கோடி ரூபாய் வரையிலே இதில் ஊழல் நடந்திருக்கிறது என்று மிகத் தெளிவாக தெரிகிறது. ஊழலும், மணல் கொள்ளையும் நடைபெற்ற காரணத்தால் தான் இப்பொழுது இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே, திடீர் என்று காய்ச்சல் வந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள், காய்ச்சல் வருகிறதோ! வரவில்லையோ! இந்த எடப்பாடி தலைமையில் இருக்கக்கூடிய அ.தி.மு.க. ஆட்சியை பொறுத்தவரையிலே ஒரு கோமா நிலையில் தான் இருந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது.

எனவே, உடனடியாக இதுகுறித்து, முறையான விசாரணை நடத்தி உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்காது, என்று நாங்கள் நினைக்கிறோம். எனவே, விரைவில் தமிழகத்திலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சி மலருகின்ற நேரத்தில் இதற்கு முறையான விசாரணை நடத்தப்பட்டு உரியவர்கள் மீது, உரிய நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தியாளர்: நீர் மேலாண்மையில் அக்கறை இல்லாத இந்த ஆட்சிக்கு எதிராக தி.மு.க.வின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்?

ஸ்டாலின்: தொடர்ந்து, திராவிட முன்னேற்றக் கழகம் இந்தப் பிரச்சினையை மக்களிடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே சட்டமன்றத்திலே எங்கெங்கு தூர் வாரப்பட்டிருக்கிறது, எவ்வளவு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்ற பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே தொடர்ந்து நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

இதுவரையிலே எந்தவித விளக்கமும், மக்களுக்கு இந்த அரசு தெரிவிக்கவில்லை. கொள்ளையடிப்பதிலும், கமிஷன் வாங்குவதிலும் தான் இந்த ஆட்சி திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கிறது. இதன்மீது உரிய நடவடிக்கையை நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும்.

செய்தியாளர்: இந்த மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இராணுவ உதவியை நாடுவது தான் சரியான முறை, இந்த அரசு இராணுவத்தையும் கூப்பிடாமல், இங்கிருக்கும் வேலையாட்களுக்கு சரியான சம்பளமும் கொடுக்காமல் இருப்பதால், ஒரே தகராறு நிலவுகிறதே?

ஸ்டாலின்: ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக, இங்கு இருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கோடி கோடியாக பணம் கொடுத்து அதன் மூலமாக இந்த ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில் தான் ஈடுபட்டிருக்கிறார்களே தவிர வேறு எந்தவிதமான முயற்சியிலும் இந்த ஆட்சி ஈடுபடுவதே இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT