Skip to main content

''ஸ்டாலினும், ஓபிஎஸ்ஸும் இணைந்துதான் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர்''-எடப்பாடி ஆவேசம்!  

Published on 11/07/2022 | Edited on 11/07/2022
 "Stalin and OPS have jointly staged this atrocity"-Edappadi

 

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் இன்று (11/07/2022) காலை 09.15 மணிக்கு செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

 

இதில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். கட்சியின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் விரோதமாக செயல்பட்டதாக ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகிய நான்கு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது பொதுக்குழு. கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 "Stalin and OPS have jointly staged this atrocity"-Edappadi

 

மறுபுறம், கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க.வினர் 11 பேரும், காவல்துறையினர் 2 பேரும் காயமடைந்தனர். இதனால் அங்கு காவல்துறை அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்கள் சென்னை ரஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பெறுவோரை சந்திக்க வந்திருந்த எடப்பாடி பழனிசாமி அவரது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

 

 "Stalin and OPS have jointly staged this atrocity"-Edappadi

 

அப்பொழுது பேசுகையில், ''ராயப்பேட்டை காவல்நிலையத்தில், காவல் ஆணையரிடம் பாதுகாப்பு தரக்கோரி புகார் கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.  தமிழக பிரதான எதிர்க்கட்சியின் அலுவலகத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர். அதுகுறித்து புகார் கொடுத்தும் போலீசார் பாதுகாப்பு கொடுக்கவில்லை. இன்று நடந்த பொதுக்குழுவில் அண்ணன் ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவர் அத்துமீறி உள்ளே நுழைந்தது மட்டுமல்லாது ரவுடிகளை அழைத்துவந்து கட்சிக்காரர்களைத் தாக்கிய சம்பவம் உண்மையில் வேதனையாக உள்ளது.எந்தவொரு கட்சி தலைவராவது தனது கட்சி தொண்டர்களை தாக்குவார்களா? இவரையெல்லாம் முதலமைச்சர் ஆக்கி, துணை முதலமைச்சர் ஆக்கி, கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை கொடுத்ததற்கு தகுந்த வெகுமதியை எங்கள் மாவட்ட செயலாளர் கொடுத்திருக்கிறார்.

 

அடிபட்டு மருத்துவமனையில் உள்ளவர்கள்கள் தான் உங்களுக்கு அந்த பதவிகளை தந்தவர்கள். மனசாட்சி இல்லாத மிருகத்தனமான மனிதனுக்குத்தான் இந்த எண்ணம் வரும். ஒரு சுயநலவாதி என்றே சொல்லலாம். ஓபிஎஸ் பொதுக்குழுவில் கலந்துகொள்வார் என்று நினைத்தோம். அதற்காக இருக்கையெல்லாம் போட்டு வைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. நான்கைந்து மீன்பாடி வண்டியிலே கற்களை கொண்டுவந்து நிர்வாகிகளை தாக்கியுள்ளனர். போலீசார் எங்கள் கட்சிக்காரர்களை தாக்குகிறார்களே தவிர ரவுடிகளை தாக்கவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு தற்பொழுது ஆட்சியில் இருக்கும் ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கமும், அவரோடு உறவு வைத்திருந்த முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணைந்து இந்த கொடூரமான சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதனுக்கு என்ன நிலை என்பதை நாட்டு மக்கள் உணர வேண்டும்.

 

ஓபிஎஸ் உடன் ஸ்டாலின் போட்ட திட்டம்தான் இது என்பது நிரூபணமாகியிருக்கிறது.ஓபிஎஸ் எந்த காலத்திலும் மக்களுக்கும் நல்லது செய்தது கிடையாது, அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கும் நன்மை செய்தது கிடையாது. ஒரு சுயநலவாதி. தனக்கு கிடைக்காத பதவி யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணம் படைத்தவர்தான் ஓபிஎஸ். அத்துமீறி உள்ளே புகுந்து எல்லா ரெக்கார்டையும் அள்ளிக்கொண்டு போகிறார் என்றால் அவர் எல்லாம் தலைவரா கேவலமாக இருக்கிறது. இது ஒன்றும் அவரது சொத்து கிடையாது.தொண்டர்களின் சொத்து'' என்றார் ஆவேசமாக.

 

 

 

சார்ந்த செய்திகள்