Skip to main content

“இந்த ஸ்டாலினுக்கும் புதுச்சேரியின் மீது பாசம் தான்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

"This Stalin also has affection for Puducherry" - CM Stalin's speech

 

கலைஞர் ‘குடியரசு’ வார இதழில் ஆசிரியராகவும், பெரியாரோடு பழகுவதற்கும் புதிய பாதை தந்தது புதுவைதான் என கலைஞர் குறித்த சில சுவாரசிய நிகழ்வுகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.  

 

புதுச்சேரி மாநிலம் பட்டனூரில் புதுச்சேரி திமுக அவைத்தலைவர் சிவக்குமாரின் குடும்ப திருமண நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மேடையில் பேசுகையில், ''சிவக்குமார் வெறும் செயல்வீரர் மட்டுமல்ல. எப்பொழுதுமே எதைப்பற்றியும் கவலைப்படாமல் வெளிப்படையாக பேசக்கூடிய ஒருவர் சிவகுமார். அதனை நீங்களும் அறிவீர்கள். நானும் அறிவேன். கலைஞரை ஒருமுறை ஒரு கல்லூரியின் சிறப்புப் பேச்சாளராக பேச வைப்பதற்காக அழைத்திருக்கிறார். கலைஞரும் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.

 

அந்த நிகழ்ச்சியில் சிவக்குமார் பேசுகின்ற போது கலைஞரைப் பார்த்து ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். வேண்டுகோள் என்று கூட சொல்ல மாட்டேன், ஒரு கட்டளை. என்னவென்றால், நீங்கள் நீண்ட நேரம் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். கட்சித்தலைவருக்கு இப்படிக் கட்டளை இடலாமா என்று அந்தக் கூட்டத்தில் ஒருவர் பேசியதைச் சுட்டிக்காட்டிப் பேசிய கலைஞர் 'இளங்கன்று பயமறியாது என்பதை போல சிவகுமார் பேசியிருக்கிறார். சிவகுமாரைப் போன்ற இளைஞர்கள் கட்டளையிடவும், என்னை போன்றவர்கள் அதை நிறைவேற்றவும் காத்துக் கொண்டிருக்கிறோம்' என்று கலைஞர் அப்பொழுதே குறிப்பிட்டிருக்கிறார். எதற்குச் சொல்கிறேன் என்றால், அந்த அளவிற்கு துணிச்சல் மிக்கவர் சிவக்குமார்.

 

அவர் பொது வாழ்விற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி கடந்த 2020 ஆம் ஆண்டு அவருக்கு மறக்காமல் வாழ்த்துச் செய்தியை நான் அனுப்பி இருந்தேன். அதில் நான் குறிப்பிட்டு இருந்தேன் 'திமுகவின் மாணவர் அணியின் பொறுப்பில் இருந்த காலத்திலிருந்து புதுச்சேரியில் இயக்கத்தை வளர்க்கக்கூடிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். கலைஞரின் அன்பைப் பெற்றவர்; பேராசிரியரின் வாழ்த்தைப் பெற்றவர்; புதுவை மக்களுடைய நன்மதிப்பை, ஆதரவைப் பெற்றவர்' என்று நான் பாராட்டியிருந்தேன். பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் என்ற காரணத்தால் திராவிட இயக்கத்தின் இலக்கியத் தலைநகர் என்று சொல்லத்தக்க பெரும் புகழைக் கொண்டது இந்த புதுச்சேரி.

 

கலைஞர் பிறந்தது திருவாரூராக இருந்தாலும் அவர் பயின்று வளர்ந்தது குருகுலம் என்று அடிக்கடி சொன்னது ஈரோடு தான். அவர் கொள்கை உரம் பெற்ற ஊர் எது என்று கேட்டால் இந்த புதுச்சேரி தான். திராவிடக் கழகத்தின் பரப்புரை, பிரச்சாரம், நாடகம் என அவைகளை ஊர் ஊராகச் சென்று கலைஞர் நடத்தினார். அந்த நாடகத்தின் அரங்கேற்றம் எங்கே நடந்தது என்றால் இந்த புதுச்சேரியில் தான். அவர் நடத்திய நாடகம் பாதியிலேயே நிறுத்தப்படுகிறது. காரணம், திடீரென்று ஒரு கலகக் கும்பல் உள்ளே புகுந்து அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள்.

 

அப்பொழுது கலைஞரை பலமாக தாக்கிவிட்டு சாக்கடையில் வீசி விட்டு போய்விட்டார்கள். பார்த்தவர்கள் எல்லாம் கலைஞர் இறந்து விட்டார்... இறந்துவிட்டார்... என்றுதான் நினைத்துக் கொண்டு போய் விட்டார்கள். அந்த அளவிற்கு தாக்கப்பட்டு கலைஞர் சாக்கடையில் விழுந்து கிடக்கிறார். மறுநாள் காலையில் தந்தை பெரியார் அதைக் கேள்விப்பட்டு ஓடோடி வந்து, கலைஞரைத் தூக்கி தனது மடியிலேயே வைத்து, மருந்து போட்டு, இனிமேல் நீ இங்கு இருக்க வேண்டாம். என்னோடு வா, என்று ஈரோட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். என்னுடைய குடியரசு என்ற வார இதழில் நீ துணை ஆசிரியராக பணியாற்று என்று பெரியார் கலைஞரிடத்தில் சொல்லிவிட்டார். எனவே கலைஞர் குடியரசு வார இதழில் ஆசிரியராகவும், பெரியாரோடு பழகுவதற்கும் புதிய பாதை தந்தது புதுவை தான். அவருக்கு மட்டுமல்ல அவருடைய மகனாக இருக்கக்கூடிய ஸ்டாலினுக்கும் புதுச்சேரியின் மீது பாசம் தான். அந்தக் கொள்கை உணர்வில்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை; இளைஞருக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
happened to the young man on Treatment to reduce obesity in puducherry

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில், உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் நேற்று முன் தினம் (22-04-24) அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த அந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.