Skip to main content

‘கை’ கொடுக்குமா ஸ்ரீவில்லிபுத்தூர்?

Published on 29/03/2021 | Edited on 29/03/2021

 

Srivelliputhur constituency admk and congress


நக்கீரன் மார்ச் 25 இதழில், ‘சட்டமன்றத் தேர்தல் 2021 – 234 தொகுதிகளில் யார் முன்னிலை? பண விநியோகத்துக்கு முன் கள நிலவரம்!’ என்னும் தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டு, நக்கீரன் டீம் எடுத்த சர்வே விபரங்களை வெளியிட்டுள்ளோம். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தி, நக்கீரன் இதழில் ‘கள நிலவரம்’ வெளிவந்திருக்கும் நிலையில், நக்கீரன் இணையதள வாசகர்களுக்காக,  ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி குறித்த விரிவான கட்டுரை இதோ: 

 

மாதவராவ் (காங்கிரஸ்) – மான்ராஜ் (அதிமுக) 

 

ஐந்து தடவை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தாமரைக்கனி. தொகுதி மறு சீரமைப்பில் தனித் தொகுதியான பிறகு, ஆளுமை மிக்க எம்.எல்.ஏ. யாரும் இத்தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படவில்லை. இத்தேர்தலில் போட்டி என்பது, திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவுக்கும் அதிமுக வேட்பாளர் மான்ராஜுக்கும்தான். 

 

Srivelliputhur constituency admk and congress

 

சிட்டிங் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரபிரபாவுக்கு சீட் மறுக்கப்பட்டு ஒதுங்கிவிட்டதால், அவர் தரப்பிலிருந்து மான்ராஜுக்கு ஒத்துழைப்பு என்பதே இல்லை. பக்கத்து தொகுதியான ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி போட்டியிடுவதால், ஆளும்கட்சியினரின் மொத்த உழைப்பும் மான்ராஜுக்கு கிடைக்கவில்லை. அமமுக வேட்பாளர் சங்கீதப்ரியா பிரிக்கும் முக்குலத்தோர் வாக்குகள், இவருக்குப் பலவீனம். கரோனா ஊரடங்கின்போது, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையிலும், இரண்டு மடங்கு, மூன்று மடங்கு விலையில் கள்ள மார்க்கெட்டில் தாராளமாக பாட்டில்கள் சப்ளையான பின்னணியில் இவர் இருந்ததாக எதிரணியினரின் பிரச்சாரத்தில் எடுத்துவிடப்படுகிறது. சிரிப்புக்கும் இவருக்கும் தூரம். முகத்தில் வெளிப்படும் இறுக்கம், பணம் செலவழிப்பதிலும் இருப்பதால், தேர்தல் பணியில் ஆளும்கட்சியினருக்கே உரித்தான வேகத்தை, இத்தொகுதியில் பார்க்க முடியவில்லை. 

 

போட்டியிடும் வேட்பாளர்களில் மக்களால் கவனிக்கப்படுபவராக இருக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ். அரசியல் பின்னணி உள்ள இவருக்கு, ஒரு ஒன்றியம் முழுவதும் சொந்தபந்தங்களின் வாக்குகள் கணிசமாக இருக்கின்றன. ‘சம்பாதிப்பதற்காக அரசியலுக்கு வரவில்லை; சேர்த்து வைத்ததை செலவழிப்பதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். எம்.எல்.ஏ. ஆவதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை மக்களுக்கே செலவழிப்பேன்’ என்று இவர் கூறுவது, ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது. 

 

தொகுதி சாதகமாக இருந்தும், கரோனா தொற்று ஏற்பட்டு மாதவராவ் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தந்தையின் வெற்றிக்காக மகள் திவ்யா தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். நாம் தமிழர் – அபிநயா பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் – குருவையா (ஓய்வுபெற்ற நீதிபதி), புதிய தமிழகம் – சாந்தி போன்றவர்களும் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.