Skip to main content

போர்க்குற்ற விசாரணையிலிருந்து இலங்கை விலகல்: இந்திய அரசு தலையிட வேண்டும்! ராமதாஸ்

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கைப் போரின் போது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த பன்னாட்டு விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தில் அந்நாடு அறிவித்திருக்கிறது. போர்க்குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான இலங்கை அரசின் இந்த முயற்சி கண்டிக்கத்தக்கதாகும்.


 

ramadoss




ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐநா மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இலங்கை அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா, இலங்கை போருக்குப் பிறகு அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்த இராஜபக்சே தலைமையிலான அரசு ஏராளமான நடவடிக்கைகளை  மேற்கொண்டதாக கூறியுள்ளார். ஆனால், அதன்பின் வந்த மைத்ரிபால சிறிசேனா அரசு, சில நாடுகளை மகிழ்விக்கும் நோக்குடன் இலங்கை போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டு வந்ததாகவும், இலங்கை மக்களுக்கு விருப்பம் இல்லாத இந்த தீர்மானத்தை இலங்கையில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள கோத்தபாய ராஜபக்சே அரசே திரும்பப் பெறுவதாகவும் குணவர்த்தனா கூறியுள்ளார். தீர்மானம் திரும்பப் பெறப்பட்ட பிறகு இலங்கையில் அமைதியை ஏற்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

ஈழப்போருக்குப் பிறகு தமிழர்கள் வாழும் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்த மகிந்த ராஜபக்சே அரசு ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், ஈழப்போர் முடிந்து 11 ஆண்டுகள் ஆகியும் ஈழத்தில் தமிழர்கள் அச்சமின்றி வாழும் நிலை ஏற்படுத்தப்படவில்லை என்பது தான் உண்மையாகும். இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா தெரிவித்துள்ள  பல புள்ளிவிவரங்கள் இந்த குற்றச்சாட்டுகளை உறுதி செய்கின்றன. ஈழப்போர் முடிந்து இரு ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தும் கூட இன்னும் ஈழத்தமிழர்கள் முழுமையாக அவர்கள் முன்பு வாழ்ந்த பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை; ஈழத்தமிழர்களின் நிலங்கள் அவர்களிடம் முழுமையாக திருப்பி ஒப்படைக்கப்படவில்லை; தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தினர் இன்று வரை வெளியேற்றப்படவில்லை. இப்புகார்கள் உண்மை என்பதை அமைச்சர் குணவர்த்தனா ஒப்புக்கொண்டுள்ளார்.


 

ஈழப்போர் முடிவடைந்து 11 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்க அந்நாட்டு அரசு முடிவெடுக்கவில்லை. இராஜபக்சே, மைத்ரிபால சிறீசேனா ஆகியோர் ஆட்சிகளில் தான் இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் அதிகமடைந்தன; போர்க்குற்ற விசாரணைகளில் சாட்சியமளிக்கக் கூடியவர்கள் மிரட்டப்பட்டனர்; ஐ.நா. மனித உரிமை ஆணையக் குழு கூட இலங்கைக்குச் சென்று விசாரணை நடத்த முடியவில்லை. கோத்தபாய இராஜபக்சே அதிபர் ஆன பிற பிறகும் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு,  இலங்கை விடுதலை நாள் விழாவில் தமிழ் புறக்கணிப்பு என ஈழத்தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழலில் இலங்கையில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்று சிங்கள அரசு கூறுவதைப் போன்று ஏமாற்று வேலை எதுவும் இல்லை; அதை நம்புவதை போன்று முட்டாள்தனம் இல்லை.


 

ஈழத்தமிழர்களுக்கும், உலகெங்கும் வாழும் அவர்களின் உறவினர்களுக்கும் இப்போதுள்ள ஒரே ஆறுதல், இலங்கை போர்க்குற்ற விசாரணையை தொடர்ந்து மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதில் ஐ.நா மனித உரிமை ஆணையர் உறுதியாக இருப்பது தான். மனித உரிமை  பேரவையில் இன்று தாக்கல் செய்யவிருக்கும் அறிக்கையில், ஈழத்தில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பான போர்க்குற்ற விசாரணை இலங்கை அரசு முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் இந்த நிலைப்பாட்டுக்கு இந்தியா முழு ஆதரவளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

 

ஈழப்போரில் ஒன்றரை லட்சத்துக்கும் கூடுதலான அப்பாவித் தமிழர்களை தடை செய்யப்பட்ட பேரழிவு ஆயுதங்களை பயன்படுத்தி கொன்று குவித்த சிங்கள ஆட்சியாளர்கள், சிங்களப் போர்ப்படையினர் உள்ளிட்ட அனைவரும் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடமை இந்தியாவுக்கு உள்ளது.  எனவே, மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர்களாக உள்ள நட்பு நாடுகளை ஒன்று திரட்டி, இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் இலங்கை போர்க்குற்ற  விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் தீர்மானத்தை மனித உரிமை ஆணையத்தில் இந்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்''. இவ்வாறு கூறியுள்ளார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.