ஆர்.எஸ்.எஸ் விழாவில் கலந்துகொண்டது ஏன்? - எஸ்.பி வேலுமணி விளக்கம்

sp velumani explained why he attend rss event at kovai

கோவை மாவட்டம் பேரூர் ஆதீன மடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினுடைய நூற்றாண்டு விழா இன்று (23-06-25) நடைபெறுகிறது. அந்த விழாவோடும் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளாருடைய நூற்றாண்டு விழாவும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. இந்த இரண்டு விழாக்களை முன்னிட்டு பாரம்பரிய சிவ வேள்வி பூஜை இன்று நடத்தப்பட்டது.

இந்த விழாவில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அவருடன், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது சகோதரர் அன்பரசன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றிருந்தனர்.

இந்து முன்னணி அமைப்பின் சார்பில் மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே பெரியார், அண்ணா குறித்து சர்ச்சைக்குள்ளான வீடியோ ஒளிப்பரப்பட்டது. இது சர்ச்சையாகியுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினுடைய நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பங்கேற்றிருப்பது விவாதப்பொருளாக மாறியுள்ளது.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் விழாவில் பங்கேற்றது ஏன்? என எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து எஸ்.பி வேலுமணி கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவே சென்றிருந்தேன். பேரூர் ஆதினத்தின் அழைப்பாஇ எப்படி ஏற்காமல் இருக்க முடியும்?. கொள்கை வேறு, கூட்டணி வேறு. கொள்கையை எப்போதும் நாங்கள் விட்டுதரமாட்டோம். எங்களுடைய தலைவர்கள், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி கொள்கையை விட்டு தரமாட்டார். அடிகளாரின் நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவரும் பங்கேற்றிருந்தார். திமுக தனது தோல்விகளை மறைக்க நிகழ்ச்சி பங்கேற்பை அரசியலாக்குகிறது” என்று கூறினார்.

Coimbatore covai kovai sp velumani
இதையும் படியுங்கள்
Subscribe