
அண்மையில் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டு இந்தியாவின் சிறந்த மொழிகளில் ஒன்றான தமிழில் நான் பேச முடியாததற்குத் தமிழ்நாட்டு பாஜக தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். மதுரையின் சொக்கநாதர், கள்ளழகர் மற்றும் முருகனையும் வணங்கி எனது உரையைத் தொடங்குகிறேன். ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் முருகன் மாநாட்டை இந்த மண்ணில் சிறப்பாக நடத்த வேண்டும். பாஜக - அதிமுக கூட்டணியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைக்கப்படும். நான் டெல்லியில் தான் வசிக்கிறேன். இருப்பினும் என் காதுகள் எப்போதும் தமிழ்நாட்டின் மீதுதான் இருக்கும்.
மித்ஷாவால் திமுகவைத் தோற்கடிக்க முடியாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். அவர் சொல்வது சரிதான். நான் அதனைச் செய்ய முடியாது தான். ஆனால் தமிழக மக்கள் உங்களை (திமுக) தோற்கடிப்பார்கள். 2024ஆம் ஆண்டு பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றார். ஒடிசா, ஹரியானாவிலும் வென்றோம். மகாராஷ்டிராவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 2025இல் டெல்லி கெஜ்ரிவால் ஆட்சி முடிவுக்கு வந்தது. கடந்த 27 ஆண்டுக்குப் பிறகு அங்கு பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. டெல்லியைப் போல 2026இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி கண்டிப்பாக மலரும்” என்றார்.
அமித்ஷாவின் பேச்சுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்தி பொதுமக்களை கொன்ற தீவிரவாதிகளை பிடிக்க துப்பில்ல இவரு தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கப் போறாராம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போறேன் என்றானாம். இந்த பழமொழியைத்தான் இவரின் பேச்சு நினைவு படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.