போராடும் தமிழக மக்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
புற்றுநோயைப் பரப்பும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்ந்து 99 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முடிவுசெய்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பேரணியாக நடந்துசென்றனர். ஆனால், போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அது வன்முறையாக வெடித்தது. இதில் 11 பேரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படுகொலைகளைக் கண்டித்து பலரும் குரலெழுப்பி வருகின்றனர். இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பொதுமக்களைக் கொலைசெய்யும் இயங்காத, தொலைநோக்கு பார்வைகளற்ற அரசை எண்ணி நான் வெட்கப்படுகிறேன். மக்களின் ஓலமெனும் போராட்டம் அரசின் காதுகளில் விழவில்லையா? சுற்றுச்சூழல் பிரச்சனைகளை முன்னிறுத்தி பொதுமக்கள் நடத்திய போராட்டங்கள் இந்த அரசின் கண்களில் படவில்லையா? அல்லது மத்திய அரசின் தாளங்களுக்கு தப்பாமல் ஆட்சியதிகாரத்தில் நீடிப்பதற்காக மாநில அரசு ஆடிக்கொண்டிருக்கிறதா? என கேள்வியெழுப்பியுள்ளார்.