Skip to main content

ஏழு பேர் விடுதலை! கே.எஸ். அழகிரி எதிர்ப்பு!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

Seven tamilian release letter congress will not have interest KS Alagiri

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர், கடந்த 30 ஆண்டுகளாக சிறை கொட்டடியில் இருக்கிறார்கள். தண்டனை காலம் முடிந்தும் இவர்கள் சிறையில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசிய தலைவர்களும், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நீண்ட வருடங்களாக குரல் கொடுத்துவருகின்றனர்.

 

முந்தைய அதிமுக அரசு, இவர்களை விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைத்தது. கவர்னர் அது குறித்து முடிவையும் தெரிவிக்காமல் நீண்ட வருடங்களாக மௌனம் காத்துவருகிறார்.

 

அதேசமயம், சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் தண்டனை பெற்றிருப்பதால் மத்திய அரசு இவர்களின் விடுதலைக்கு எதிராகவே இருக்கிறது. இந்த நிலையில், ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக தமிழக அரசின் பரிந்துரையை அனுப்பிவைத்துவிட்டு அமைதியாக இருக்கிறார் கவர்னர்.

 

இந்தச் சூழலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினிடம், 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். இதனையடுத்து, தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது கவனம் செலுத்தி, 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் மு.க. ஸ்டாலின். அந்தக் கடிதம் டி.ஆர்.பாலு மூலமாக ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

 

திமுகவின் இந்த நிலைப்பாட்டை எதிர்க்கிறது தமிழக காங்கிரஸ். இதுகுறித்து இன்று (21.05.2021) செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தைக் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை. ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் எங்களுக்கு உடன்பாடில்லை. தமிழர்கள் என்ற முறையில் விடுதலை செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.