Skip to main content

இந்த சட்டமன்ற தொகுதி வேண்டாம்... எழுதிக்கொடுத்த தமிழக அமைச்சர்!!!

Published on 31/07/2020 | Edited on 31/07/2020
admk

 

 

தமிழக சட்டசபை தேர்தலை மனதில் வைத்து அதிமுகவில் தமிழகம் முழுவதும் மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்தனர். புதிதாக பிரிக்கப்பட்ட பல இடங்களில் சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருக்கிறது. 

 

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் மாநகர், புறநகர் இரண்டு மாவட்ட செயலாளர்கள் இருந்தனர். வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் மற்றும் மா.செ.வுமாக இருந்தவர், உடல்நிலை காரணம் காட்டி ஏற்கனவே எனக்கு மா.செ. பதவி வேண்டாம் என்று எழுதிக்கொடுத்தார். அந்த நேரத்தில் மண்டல பொறுப்பாளர் அமைச்சர் தங்கமணி ஆலோசனையில் பெயரில்  திருச்சி முன்னாள் எம்.பி. குமாருக்கு மா.செ. பதவி வழங்கப்பட்டது.  

 

குமார் மா.செ. ஆன பிறகு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீண்டும் மா.செ. ஆவதற்கு பல வழிகளில் முயற்சி செய்தி கொண்டிருந்தார். தற்போது டெல்டா பொறுப்பாளராக வைத்தியலிங்கம் வந்த பின்பு அவருடைய சிபாரிசில் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, துறையூர் ஆகிய தொகுதிகள் உள்ளடங்கிய பகுதிகளுக்கு மா.செ.வாக நியமிக்கப்பட்டார்,

 

தற்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் துறையூர் தொகுதி தொலைவில் இருப்பதால் என்னால் அவ்வளவு தூரம் சென்று தொகுதி வேலை செய்ய முடியாது,  என்று அந்த தொகுதி வேண்டாம் அதற்கு பதிலாக ஶ்ரீரங்கம் தொகுதியை சேர்த்து எனக்கு கொடுங்கள் என்று எழுதிக்கொடுத்தார்.

 

இதன் பிறகு நடந்த ஆலோசனையில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜக்கு ஒதுக்கப்பட்ட துறையூர் தொகுதியை பரஞ்சோதிக்கு ஒதுக்கப்பட்ட ஶ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி ஆகிய தொகுதிகளோடு சேர்த்து நான்கு தொகுதிகள் பரஞ்சோதிக்கு ஒதுக்குப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழக அமைச்சர் ஒருவர் தனக்கு மா.செ. பதவியில் ஒதுக்கப்பட்ட தொகுதி வேண்டாம் என்று சொல்லியிருப்பது திருச்சி மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.