Sentinelology presented; Judge's questions and Minister's and enforcement's answers

கடந்த 8 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

Advertisment

இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேற்று செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட முறையீட்டு வழக்கு தொடர்பாக நீதிபதி அல்லி மருத்துவமனை வளாகத்திற்கே சென்று விசாரணை நடத்தினார். அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்த வழக்கில், 28ம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisment

இந்நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. கைது செய்யும்போது நிகழ்ந்தது என்ன என்பது தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் காணொளி வாயிலாக விசாரிக்க நீதிமன்றம் திட்டமிட்டது. இதற்காக செந்தில் பாலாஜி காணொளி வாயிலாக விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி கைது செய்யப்பட்டபோது என்ன நடந்தது எனக் கேட்டார். காலை தொடங்கி இரவு வரை நடந்த சோதனையின் போது தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகள், அமலாக்கத்துறையினர் நடந்து கொண்ட விதம் ஆகியவை குறித்து அவர் சுருக்கமாக எடுத்துரைத்தார். இதன்பின் அமலாக்கத்துறை கொடுத்த மனு நகல் உங்களுக்கு கிடைக்கப்பெற்றதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினர் கொடுத்த மனு இன்னும் கிடைக்கவில்லை என்று கூறினார். இதனைத் தொடர்ந்து வாதிட்ட வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, 13 ஆம் தேதி காலை 7 மணி முதல் 14 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஏற்கனவே செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டுவிட்டதால் மீண்டும் அமலாக்கத்துறை காவலுக்கு அனுமதிக்கக்கூடாது என்று வாதிட்டார்.

தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்தனர்.விசாரணை தொடர்வதில் இருந்து தாங்கள் தடுக்கப்பட்டதாக அமலாக்கத்துறையினர் வாதிட்டனர். வழக்கில் தொடர்புடைய தொகை குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். சோதனையின் போது எங்களுக்கு செந்தில்பாலாஜி முழு ஒத்துழைப்பு தரவில்லை என்றும் அமலாக்கத்துறையினர் கூறினர். விசாரணைக்கு செந்தில்பாலாஜி முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அமலாக்கத்துறை ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என அமலாக்கத்துறை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாசித்து காண்பித்தார். இதனைத் தொடர்ந்துஅமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீதான உத்தரவு சற்று நேரத்திற்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.